தமிழகத்தில் 3 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அவனியாபுரம்:
மதுரை வில்லாபுரம் குடியிருப்பு பகுதியில் தி.மு.க. சார்பில் “தமிழர் பண்பாட்டு திருவிழா“ என்ற தலைப்பில் 2021 பெண்கள் பங்கெடுத்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி மாநகர் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் எஸ்.ஆர்.கோபி ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி எம்.எல்.ஏ., பொன்.முத்துராமலிங்கம், மணிமாறன், முன்னாள் சேர்மன் போஸ் முத்தையா, ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
இந்த விழாவில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-
மதுரை என்றாலே பாசம், வீரம் தான்..! இரண்டையும் காண வந்துள்ளேன். தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை உங்களிடமிருந்து பெறுவதற்காகவே மதுரை வந்துள்ளேன்.
சுயமரியாதை மற்றும் சமத்துவத்தை தமிழர்கள் கொண்டாடவே சமத்துவ பொங்கல் கொண்டாடினார் கலைஞர் டாக்டர் கருணாநிதி.
தற்போதைய ஆட்சி சுயமரியாதையை இழந்து விட்டது. இன்னும் 3 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அ.தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்பிவிட்டு தி.மு.க. ஆட்சி அமைப்போம் என சபதமெடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு எஸ்.ஆர். கோபி வெள்ளி செங்கோல் பரிசு அளித்தார்.
பொங்கல் வைத்த பெண்களுடன் உதயநிதி ஸ்டாலின் செல்பி எடுத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்தை தெரிவித்தார்.