செய்திகள்
திருச்சி அருகே தலையில் கால்பந்து விழுந்து மூதாட்டி பலி
திருச்சி அருகே தலையில் கால்பந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி உறையூர் கல்லறை மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் பாப்பாயி (வயது 85). இவர் கடந்த 10-ந்தேதி அப்பகுதியில் நின்று கொண்டிருந்த போது, அந்த பகுதி இளைஞர்கள் வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது கால்பந்து எதிர்பாராத விதமாக பாப்பாயி தலையில் விழுந்தது. இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பாப்பாயி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.