செய்திகள்
மன்னார்குடி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி
மன்னார்குடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த வாட்டார் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சந்தோஷ் (வயது24). இவர் மன்னார்குடி அருகே நெடுவாகோட்டையில் மரம் இழைக்கும் தொழிலகத்தில் வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு சந்தோஷ் நெடுவாகோட்டையில் இருந்து மன்னார்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அண்ணாமலைநாதர் கோவில் சன்னதி தெருவை சேர்ந்த சேசுராஜ்(31) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள், சந்தோஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சந்தோஷ் மீது மன்னார்குடியில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற அரசு பஸ் சக்கரம் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சேசுராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி போலீசார், இறந்த சந்தோஷம் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமாக சேசுராஜை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் திருவாரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார் என்பது தெரியவந்தது.