செய்திகள்
குளித்தலை அருகே உள்ள கணக்கப்பிள்ளையூரில் குடியிருப்புகளுக்கு நடுவே சுடுகாடு
குளித்தலை அருகே கணக்கப்பிள்ளையூரில் பகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள சுடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை:
கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், திம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது கணக்கப்பிள்ளையூர். இந்த ஊரில் 6-வது வார்டு கணபதி நகரில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் பயன்படுத்தும் சுடுகாடு பல வருடங்களாக இருந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த சுடுகாடு இருக்கும் இடத்தை சுற்றி வீடுகள் எதுவும் இல்லாத நிலையில் இருந்துள்ளது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப நாளடைவில் சுடுகாடு சுற்றியுள்ள பகுதிகயில் பலர் வீடுகள் கட்டி வசிக்க தொடங்கி உள்ளனர்.
இந்தநிலையில் இந்த சுடுகாட்டில் இறந்தவர்களின் சடலங்களை எரிக்கும்போது அதில் இருந்து வரும் துர்நாற்றமுள்ள புகையை சுவாசிப்பதால் பல்வேறு நோய்களுக்கு இப்பகுதி மக்கள் ஆளாவதாக கூறுகின்றனர். இரவு நேரங்களில் எரியும் சடலங்களை பார்க்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சமடைந்து வருவதாகும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் உருவ பொம்மைகள் செய்யப்பட்டு அவை பொதுமக்கள் நடந்து செல்லும் வழியிலேயே போட்டு விட்டு சென்றுவிடுவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் இந்த சுடுகாட்டில் பில்லி, சூனியம் செய்யப்படுவதாகும் தெரிவிக்கின்றனர். இதனால் அந்த பகுதி வழியாக நடந்து செல்லும் சிறுவர்கள், கர்ப்பிணிகள், பெண்கள் உள்பட பலர் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகின்றனர்..
எனவே பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் கலந்து பேசி இந்த சுடுகாடு இருக்கும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.