செய்திகள்
தபால் வாக்கு முறைக்கு எதிரான திமுக வழக்கு ஒத்திவைப்பு
80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான தபால் வாக்கு திட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் தொடர்ப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த வசதி ஏற்படுத்தி தரப்படும் என தலைமை தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்கா அறிவித்தார். விருப்பப்படும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த வசதியை பயன்படுத்தலாம் என்றும் கூறினார்.
இந்த புதிய திட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், தபால் வாக்கை வாக்குச்சாவடி அதிகாரி நேரில் சென்று பெற வேண்டும் என்பதால் இதில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த திட்டத்தை ரத்து செய்ய உத்தரவிடவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுகவின் மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். டிசம்பர் 3 இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுடன் திமுக மனுவையும் சேர்த்து ஜனவரி 7ம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறினர்.