கன்னியாகுமரி கடலில் சூறாவளி காற்று- படகு போக்குவரத்து ரத்து
நாகர்கோவில்:
கன்னியாகுமரி கடலில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இங்கு வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்கள் படகில் சென்று நினைவு மண்டபத்தை பார்த்து வருவார்கள். கடந்த மார்ச் மாதம் கொரோனா பிரச்சினை காரணமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. 8 மாதங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் படகு போக்குவரத்து நடந்து வருகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை முதல் கன்னியாகுமரி கடலில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் 10 முதல் 15 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தன. இதன் காரணமாக இன்று படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. காலை 8 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.