தூத்துக்குடியில் இன்று கழுத்தை அறுத்து தொழிலாளி படுகொலை
முள்ளக்காடு:
தூத்துக்குடி உப்பாற்று ஓடை ரவுண்டனா முடுக்கு காடு எதிரே துறைமுகம் -மதுரை சாலையில் இன்று காலை ஒரு வேன் திறந்து கிடந்தது.
அதில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு கொலை செய்யப்பட்டவரின் ஆதார் அட்டை கிடந்தது.
அதில் ஓட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சி சிலோன் காலனியை சேர்ந்த மாரியப்பன் (வயது 52) என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் மாரியப்பன் தூத்துக்குடியில் தங்கி இருந்து அங்கு வேன் மூலம் சென்று நான்கு சக்கர வாகனங்களுக்கு பழுதுபார்க்கும் ஒருவரிடம் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.
நேற்று இரவு சம்பவ இடத்தில் மாரியப்பனுடன் சேர்ந்த சிலர் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்தவர்கள் மாரியப்பனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாரியப்பனை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி தப்பி யோடிய கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் மெயின் சாலையில் தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.