மாங்காட்டில் வீடு புகுந்து பெண் வெட்டிக்கொலை
பூந்தமல்லி:
மாங்காடு அடுத்த மலையம்பாக்கத்தை சேர்ந்தவர் குணசேகரன். துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தெய்வாணை (வயது 42). இவர் மட்டும் தனியாக இங்கு தங்கி இருந்தார். நேற்று இரவு 10 மணி அளவில் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு தெய்வாணை சென்றார். அவர் கதவை திறந்து பார்த்தபோது மர்ம கும்பல் அரிவாளுடன் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கண் இமைக்கும் நேரத்தில் கொலைக்கும்பல் அரிவாளால் தெய்வாணையை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்து, மார்பில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த தெய்வாணை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
உடனே கொலை வெறிக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் அங்கு வந்தனர். அப்போது தெய்வானை வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மாங்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தெய்வாணையின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையுண்ட தெய்வானைக்கும், அவரது தங்கை ஒருவருக்கும் நீண்ட காலமாக சொத்து தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
எனவே இந்த தகராறில் கூலிப்படையை ஏவி தெய்வாணை தீர்த்து கட்டப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தெய்வாணையின் தங்கை உள்ளிட்டோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீட்டில் இருந்த பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.