செய்திகள்
கைது

டைல்ஸ் ஷோரூம் கணக்காளரிடம் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

Published On 2020-12-13 04:41 GMT   |   Update On 2020-12-13 04:41 GMT
டைல்ஸ் ஷோரூம் கணக்காளரிடம் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள செல்லப்பம்பட்டியில் டைல்ஸ் ஷோரூம் நடத்தி வருபவர் பிரதீப் (வயது 34). இந்த ஷோரூமில் கணக்காளராக மின்னாம்பள்ளியை சேர்ந்த தியாகராஜன் (52) வேலை பார்த்து வருகிறார். இவரிடம் கடந்த 1-ந் தேதி பொட்டைகுட்டைமேடு அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நவீன்குமார் (21), தினேஷ்குமார் (20) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் மீட்கப்பட்டது.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (34) என்பவரை நாமக்கல் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் துறையூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த அவரை நாமக்கல் அருகே உள்ள கூலிப்பட்டி பகுதியில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் மீட்கப்பட்டது. இந்த வழக்கில் மொத்தமாக ரூ.4 லட்சத்து 51 ஆயிரம் மீட்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News