செய்திகள்
கரோலின் பிரிசில்லா, இவாலின்.

மழைநீர் கால்வாய்க்குள் விழுந்த மொபட்: தாய், மகள் உயிரிழப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவு

Published On 2020-12-08 02:33 GMT   |   Update On 2020-12-08 02:33 GMT
மழைநீர் கால்வாய்க்குள் மொபட் விழுந்ததில் தாய்-மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையாளர், காஞ்சிபுரம் கலெக்டர் ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை அம்பத்தூரை அடுத்த அயனம்பாக்கத்தில் வசித்து வந்த தனியார் மருத்துவக்கல்லூரி பேராசிரியை கரோலின் பிரிசில்லா, தனது மகள் இவாலினுடன் நேற்று முன்தினம் மாலை மொபட்டில் சூப்பர் மார்க்கெட் சென்றார். தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையின் சர்வீஸ் சாலையில் நொளம்பூர் அருகே சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி மழைநீர் கால்வாய்க்குள் மொபட் விழுந்ததில் தாய்-மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதுதொடர்பாக தினத்தந்தியில் வெளியான செய்தியை மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தார். பின்னர், இந்த சம்பவத்துக்கு யார் பொறுப்பு? என்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர், காஞ்சிபுரம் கலெக்டர் ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.

இதேபோன்று, காஞ்சிபுரம் களக்காட்டூர் வேளாண் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த சரண்யா என்ற மாற்றுத்திறனாளி பெண், அருகில் உள்ள குடியிருப்பில் இருந்த கழிவறையை பயன்படுத்திய போது மூடப்படாமல் இருந்த கழிவறை தொட்டிக்குள் தவறி விழுந்து பலியானார். வேளாண் அலுவலகத்தில் கழிவறை வசதி இல்லாததே அவரது மரணத்திற்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டது.

இதுகுறித்து வேளாண்மை துறை இயக்குனர் பதில் அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News