செய்திகள்
கரூரில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
கரூரில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்:
கரூர் தாந்தோணிமலை பகுதிக்கு உட்பட்ட கருப்பகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 64). இவர் நேற்று முன்தினம் கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மர்மநபர் ஒருவர் வந்தார்.
அப்போது சரஸ்வதி தனியாக வருவதை அறிந்த அந்த மர்ம நபர், மூதாட்டியிடம் பேச்சு கொடுத்தார். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் சரஸ்வதி கழுத்தில் அணிந்த 4 பவுன் தங்கசங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.
இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த மர்மநபர் தங்கச்சங்கிலியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து சரஸ்வதி தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்.