செய்திகள்
டாக்டர் ராமதாஸ்

சாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி: பாமக நிறுவனர் ராமதாஸ்

Published On 2020-12-01 14:48 GMT   |   Update On 2020-12-01 14:48 GMT
சாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனே வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க. மற்றும் வன்னியர்சங்கம் இணைந்து சென்னையில் இன்றுமுதல் டிசம்பர் 31-ந்தேதிவரை தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்றும் நோக்கத்தோடு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாமக தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் சென்னை நோக்கி கார் உள்பட பல்வேறு வாகனங்களில் வந்தனர்.

அவர்களை சென்னை எல்லையான பெருங்களத்தூர் சோதனைச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், பாமக-வை சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் மட்டுமே சென்னைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். எஞ்சிய பாமக கட்சி தொண்டர்களை திருப்பி அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இதனால், தங்களையும் சென்னைக்குள் செல்ல அனுமதிக்கக்கோரி பாமக கட்சி தொண்டர்கள் பெருங்களத்தூர்- ஜிஎஸ்டி நெடுச்சாலையின் இருபுறமும் திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இட‌ஒதுக்கீடு கோரி பாமக போராட்டம் நடத்திவரும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமியை அன்புமணி ராமதாஸ் திடீர் என சந்தித்து பேசினார். அப்போது, வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முதல்வரிடம் வலியுறுத்தினார்.

தமிழக அரசு சார்பில் சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனே வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News