search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாமக போராட்டம்"

    • 90 மி.லி. காகிதக் குடுவை மது ரூ.70 என்ற அளவில் விற்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது.
    • வரலாறு காணாத அளவிலான போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மதுவகைகள் கண்ணாடி புட்டிகளில் அடைத்து விற்கப்படுவதற்கு மாற்றாக காகிதக் குடுவைகளில் அடைத்து விற்கப்படவுள்ளதாகவும், அது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் மது விலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருக்கிறார்.

    மது அருந்துபவர்கள் காலியான மதுப்புட்டிகளை கண்ட இடங்களில் வீசுவதால் சுற்றுச்சூழலுக்கும், விலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளையும், ஆபத்துகளையும் ஒப்பிடும் போது காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறைவு. ஆனாலும், தமிழ்நாட்டில் மது விலக்கை நடைமுறைப்படுத்தும் கோணத்தில் பார்க்கும் போது, இந்த மாற்றம் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்படுவதை தாமதப்படுத்தும். அந்த வகையில் இதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

    இவற்றையெல்லாம் விட பாட்டாளி மக்கள் கட்சிக்கு உள்ள மிகப்பெரிய அச்சம் என்னவென்றால், காகிதக் குடுவைகளில் மது விற்பனை என்ற பெயரில், 90 மி.லி. மதுப்புட்டிகள் சந்தையில் அறிமுகம் செய்யப்படுமோ? என்பது தான்.

    90 மி.லி. மதுப்புட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டால், அது தமிழ் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் பெருந்து ரோகமாக இருக்கும்.

    90 மி.லி. காகிதக் குடுவை மது ரூ.70 என்ற அளவில் விற்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. ரூ.70 என்பது மிகவும் எளிதாக திரட்டப்படக் கூடியது.

    அதுமட்டுமின்றி காகிதக் குடுவைகளில் விற்கப்படும் மது, மில்க் ஷேக், பழச்சாறுகள் போன்றவற்றைப் போலவே தோற்றமளிக்கக்கூடியது என்பதால் சிறுவர்களோ, மாணவர்களோ காகிதக் குடுவைகளில் மது அருந்தினால் கூட அவற்றை மற்றவர்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது என்பதால் 90 மிலி மது வகை அறிமுகம் செய்யப்படுவது மிகப்பெரிய அளவில் சமூக சீரழிவை ஏற்படுத்தி விடும்.

    தமிழ்நாட்டில் படிப்படியாக முழு மதுவிலக்கு என்பது தான் மக்களின் விருப்பம். அரசின் திட்டமும் அதுவாகத் தான் இருக்க வேண்டும். அதற்கு எதிரான வகையில், 90 மிலி காகிதக் குடுவையில் மதுவை அறிமுகம் செய்து, இளைய தலை முறையினரிடம் மதுப்பழக்கத்தை அதிகரிக்க தமிழக அரசு முயன்றால் அதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. அதைக் கண்டித்து ஒட்டுமொத்த தமிழக மக்களையும் திரட்டி, வரலாறு காணாத அளவிலான போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • விளை நிலத்தில் வாய்க்கால் வெட்டுவதை கண்டித்து பா.ம.க.வினர் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஒருசில இடங்களில் பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. நேற்று இரவும் 5 பஸ்கள் மீது கற்களை வீசி கண்ணாடி உடைக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் 2-வது சுரங்கத்தின் விரிவாக்கத்திற்காக சேத்தியாததோப்பு அருகே உள்ள கற்றாழை, கரி வெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

    வளையமாதேவியில் பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியது. இதற்காக அங்கு பயிரிடப்பட்ட நெற் பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்து பணிகளை தொடங்கினார்கள்.

    இதனால் விவசாயிகள் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அழிக்கப்படுவதை கண்டித்து பா.ம.க. சார்பில் அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வன்முறை வெடித்தது.

    போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர். இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அன்புமணி ராமதாஸ் உள்பட 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 28 பேரை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விளை நிலத்தில் வாய்க்கால் வெட்டுவதை கண்டித்து பா.ம.க.வினர் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருசில இடங்களில் பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. நேற்று இரவும் 5 பஸ்கள் மீது கற்களை வீசி கண்ணாடி உடைக்கப்பட்டது. கடந்த 3 நாட்களில் மட்டும் 25 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

    பா.ம.க.வினர் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து நேற்று மாலை 6 மணி முதல் கடலூரில் இருந்து பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர். இன்று காலை முதல் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    • ஆர்ப்பாட்டத்தையொட்டி ஐ.ஜி. கண்ணன் தலைமையில் வெளிமாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார் நெய்வேலிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள 3 திறந்த வெளிசுரங்கங்களை அமைத்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல் மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த மின்சாரம் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

    இதனிடையே நிலக்கரி எடுக்க போதிய இடமில்லை எனவும், நிலக்கரி தட்டுப்பாட்டால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் 1,000 மெகாவாட் மின் உற்பத்தியை நிறுத்தப்போவதாக என்.எல்.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

    எனவே 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் ஏற்கனவே என்.எல்.சி.யால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் நேற்று முன்தினம் முதல் முதற்கட்ட பணியை தொடங்கியது.

    அந்த நிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் அனைத்தும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்றும் இந்த பணி 2-வது நாளாக தொடர்ந்தது.

    மேலும் என்.எல்.சி. சுரங்க நீரை வெளியேற்றுவதற்காக பரவனாறுக்கு பதிலாக புதிய பரவனாறு அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இதற்காக நேற்று காலை ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் வளையமாதேவியில் இருந்து கரிவெட்டிக்கு செல்லும் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, 10 ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டது.

    மேலும் தர்மநல்லூரில் இருந்து வளையமாதேவி வரை 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய பரவனாறு வெட்டப்பட்டது. இதற்கு விவசாயிகள் மற்றும் பா.ம.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்றது.

    இதனை கண்டித்து பா.ம.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் பஸ்களின் கண்ணாடியும் உடைக்கப்பட்டன.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

    என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஏற்கனவே பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. கடையடைப்பு போராட்டமும் நடத்தினர். தமிழகத்தை விட்டு என்.எல்.சி. வெளியேற வேண்டும் என பா.ம.க.வினர் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் வளையமாதேவியில் விவசாய விளைநிலங்களை அழித்து வாய்க்கால் வெட்டும் பணிக்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று அறிவித்தார். கும்பகோணம்-பண்ருட்டி சாலையில் என்.எல்.சி. ஆர்ச் கேட் அருகே இந்த போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நண்பகல் 12.05 மணியளவில் நெய்வேலி வந்தார்.

    நெய்வேலி ஆர்ச் கேட் அருகே நடைபெற்ற முற்றுகையில் அவர் பங்கேற்றார். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் வெளியேறு வெளியேறு என்.எல்.சி.யே வெளியேறு, வெளியேற்று... வெளியேற்று... மத்திய-மாநில அரசுகளே என்.எல்.சி. நிர்வாகத்தை உடனடியாக வெளியேற்று. விட மாட்டோம்... விடமாட்டோம்... ஒருபிடி மண்ணை கூட விடமாட்டோம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    பா.ம.க. ஆர்ப்பாட்டத்தையொட்டி கடலூர் மாவட்டத்தில் 27 டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று மாலை 6 மணி வரை மூடப்படுகிறது.

    ஆர்ப்பாட்டத்தையொட்டி ஐ.ஜி. கண்ணன் தலைமையில் வெளிமாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார் நெய்வேலிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மேற்பார்வையில் 5 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 17 டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதுமட்டுமின்றி கடலூர் மாவட்ட போலீசார் ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பா.ம.க.வினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக நெய்வேலியில் பரப்பான சூழ்நிலை நிலவியது.

    • போராட்டத்தின் போது தென்னை மரக்கன்று, கரும்பு பயிர், நெற்பயிர்களை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுத்தனர். மேலும் அங்கு இருந்த பேரி கார்டுகளை போட்டு தடுத்தனர்.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வினர் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தமிழகத்தில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவாகவும், என்.எல்.சி. நிறுவனம் மற்றும் தமிழக அரசை கண்டித்து புதுச்சேரி- கடலூர் எல்லையான முள்ளோடை நுழைவு வாயிலில் புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி, துணை அமைப்பாளர் வடிவேலு தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தின் போது தென்னை மரக்கன்று, கரும்பு பயிர், நெற்பயிர்களை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுத்தனர். மேலும் அங்கு இருந்த பேரி கார்டுகளை போட்டு தடுத்தனர்.

    தகவல் அறிந்த பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். போராட்டத்தை கைவிட மறுத்ததால் இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதற்கிடையே சிலர் தாங்கள் மறைத்து வைத்து இருந்த லாரி டயரை எடுத்து வந்து போராட்டம் நடந்த இடத்தில் போட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தி சாலையில் போட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக பா.ம.க.வினர் 28 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • மாவட்டம் முழுவதும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • போலீசார் பா.ம.க. நிர்வாகிகளை சூழ்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கடலூர்:

    என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் விவசாயிகளின் நிலத்தில் 2-வது சுரங்க விரிவாக்க பணி தொடங்கப்பட்டது. இதனை கண்டித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணி மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வந்தனர். மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ம.க. நிர்வாகிகள் 56 பேரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதுமட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை அருகே பா.ம.க.மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட தலைவர் தடா.தட்சிணாமூர்த்தி, மாணவரணி கோபிநாத், கவுன்சிலர் சரவணன், இளைஞரணி சந்திரசேகர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரண்டனர்.

    அப்போது அங்கிருந்த போலீசார் பா.ம.க. நிர்வாகிகளை சூழ்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் பா.ம.க. நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் இந்தப் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறி பா.ம.க. நிர்வாகிகளை அதிரடியாக கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • பாகூர் பகுதியை சேர்ந்த பா.ம.க.வினர் பஸ் இயக்கப்படுவதை கண்டித்து புதுவை எல்லையான முள்ளோடையில் அரசு பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை கிருமாம்பாக்கம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    பாகூர்:

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து இன்று கடலூர் மாவட்டம் முழுவதும் பந்த் போராட்டம் நடைபெறும் என்று பா.ம.க. தலைவர் ராமதாஸ் அறிவித்தார்.

    பா.ம.க.வினர் வணிக நிறுவனங்கள் கடைகளின் உரிமையாளரிடம் நோட்டீஸ் வழங்கி முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினர்.

    ஆனால் கடலூரில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. புதுவையில் இருந்து கடலூர் செல்ல போலீசார் ஏற்பாடு செய்து இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாகூர் பகுதியை சேர்ந்த பா.ம.க.வினர் பஸ் இயக்கப்படுவதை கண்டித்து புதுவை எல்லையான முள்ளோடையில் அரசு பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை கிருமாம்பாக்கம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    • கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் தலைமையில் சுமார் 7 ஆயிரம் போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • பந்த் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ம.க.வினர் 56 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி. நிர்வாகம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்கு விவசாயிகளிடமிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். என்.எல்.சி., கடலூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் போராட்டங்கள் நடத்தினர்.

    மேலும், ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும். வீட்டிற்கு ஒருவருக்கு என்.எல்.சி.யில் நிரந்தர வேலை வேண்டும். மாற்று இடம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆணைவாரி, எரும்பூர், கத்தாழை கிராம மக்கள் வலியுறுத்தினர்.

    இக்கிராம மக்களுக்கு ஆதரவாக பா.ம.க., கட்சி களம் இறங்கியது. அதில் குறிப்பாக என்.எல்.சி. நிறுவனம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டார்.

    இதனையடுத்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கடலூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் என்.எல்.சி. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.

    இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும் பணியை நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதற்கட்டமாக எல்லைகளில் வாய்க்கால் வெட்டும் பணிகள் நடந்தது. இதனை அறிந்து அங்கு திரண்ட பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பணிகள் நடைபெற்றன.

    இதையடுத்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து இன்று கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதனையொட்டி பா.ம.க.வினர் வணிக நிறுவனங்கள், கடைகளின் உரிமையாளர்களிடம் நோட்டீஸ் வழங்கி முழு அடைப்பு போராட்டத்திற்கு கடலூர் மாவட்டம் முழுவதும் ஆதரவு திரட்டினர்.

    அதன்படி இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஆனால், கடலூரில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தது. ஒரு சில கடைகள் மட்டுமே மூடப்பட்டிருந்தது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல இயங்கியது. 5 பஸ்களை ஒன்றிணைத்து போலீஸ் பாதுகாப்புடன் இயக்கினார்கள்.

    புதுவையிலிருந்து கடலூருக்கு வரும் பஸ்கள் மாநில எல்லையான முள்ளோடையில் நிறுத்தப்பட்டது. அங்கு இறக்கிவிடப்பட்ட பயணிகள் ஆட்டோக்கள் மூலம் கடலூருக்கு வந்தனர். கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு, புவனகிரி, மந்தாரக்குப்பம், நெய்வேலி, முத்தாண்டிக்குப்பம் பகுதிகளில் 90 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்தது.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் தலைமையில் சுமார் 7 ஆயிரம் போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், ரோந்து பணியும் தீவிரபடுத்தப்பட்டு இருந்தது.

    பந்த் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ம.க.வினர் 56 பேர் கைது செய்யப்பட்டனர். மந்தாரக்குப்பத்தில் கடைகளை அடைக்கும்படி கூறிய பா.ம.க. முன்னாள் மாவட்ட தலைவர் தர்மலிங்கம் உட்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர். பா.ம.க. முழு அடைப்பு போராட்டம் அறிவித்திருந்தாலும், கடலூரில் வழக்கமான இயல்பு வாழ்க்கை நிலவியது. பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை.

    • கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் நாளை பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • உரிய பாதுகாப்புடன் நாளை வணிக நிறுவனங்களும், பஸ்களும் இயங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி. நிர்வாகம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்கு விவசாயிகளிடமிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். என்.எல்.சி., கடலூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் போராட்டங்கள் நடத்தினர்.

    மேலும், ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும். வீட்டிற்கு ஒருவருக்கு என்.எல்.சி.யில் நிரந்தர வேலை வேண்டும். மாற்று இடம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆணைவாரி, எரும்பூர், கத்தாழை கிராம மக்கள் வலியுறுத்தினர்.

    இக்கிராம மக்களுக்கு ஆதரவாக பா.ம.க., த.வா.க. போன்ற கட்சிகளும் களம் இறங்கின. அதில் குறிப்பாக என்.எல்.சி. நிறுவனம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டார்.

    இதனையடுத்து வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கடலூர் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் என்.எல்.சி. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.

    இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும் பணியை நேற்று தொடங்கியது. இதில் முதற்கட்டமாக எல்லைகளில் வாய்க்கால் வெட்டும் பணிகள் நடந்தது. இதனை அறிந்து அங்கு திரண்ட பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பணிகள் நடைபெற்றன.

    இதையடுத்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து நாளை (வெள்ளிக்கிழமை) கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள பா.ம.க.வினர் கடைகளை மூடச் சொல்லி உரிமையாளர்களிடம் கூறினர். இதனால் கடலூர் மாவட்டத்தில் நாளை கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்படுமா? பஸ்கள் ஓடுமா? என்ற கேள்விகள் பொதுமக்களிடம் எழுந்தது.

    இதுகுறித்து டெல்லியில் முகாமிட்டுள்ள கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் நாளை பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வழக்கம்போல் பஸ்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கும். கடைகளும் திறக்கப்படும். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியினருடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

    இது மட்டுமின்றி என்.எல்.சி. நிர்வாகத்திடம் கூடுதல் இழப்பீடு பெற்று ஒப்புக்கொண்டவர்களின் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படுகிறது. அனைவரின் நிலமும் கையகப்படுத்தப்படவில்லை. ஆகையால் உரிய பாதுகாப்புடன் நாளை வணிக நிறுவனங்களும், பஸ்களும் இயங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொசஸ்தலை ஆறு ஆந்திரத்தில் உருவானாலும் கூட, அது பயணிப்பது தமிழ்நாட்டில் தான்.
    • கொசஸ்தலை ஆற்றுப்படுகையின் மொத்தப்பரப்பு 3,727 சதுர கி.மீ ஆகும். இதில் 877 சதுர கி.மீ மட்டும் தான் ஆந்திரத்தில் உள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டுவதற்கான நடவடிக்கைகளை ஆந்திர மாநில அரசு தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டு உழவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்கு எதிரான ஆந்திர அரசின் இந்த சட்டவிரோத நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    கொசஸ்தலை ஆறு ஆந்திரத்தில் உருவானாலும் கூட, அது பயணிப்பது தமிழ்நாட்டில் தான். ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரத்தில் உருவாகும் கொசஸ்தலை ஆறு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக தமிழகத்திற்கு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு கொசஸ்தலை ஆறு தான் பாசன ஆதாரமாக திகழ்கிறது.

    அதுமட்டுமின்றி, தாமரைப்பாக்கம் அணை, வள்ளூர் அணை, வெளியகரம் ஏரி, பூண்டி ஏரி ஆகியவற்றை நிரப்பும் கொசஸ்தலை அதன் பின் சென்னை எண்ணூரில் வங்கக்கடலில் கலக்கிறது.

    கொசஸ்தலை ஆற்றுப்படுகையின் மொத்தப்பரப்பு 3,727 சதுர கி.மீ ஆகும். இதில் 877 சதுர கி.மீ மட்டும் தான் ஆந்திரத்தில் உள்ளது. மீதமுள்ள 2,850 சதுர கி.மீ படுகை தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதுமட்டுமின்றி, கொசஸ்தலை ஆறு மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறு ஆகும்.

    அத்தகைய ஆறுகளில் கடைமடை பாசனப் பகுதியான தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் அணைகளை கட்ட முடியாது. இந்த விதிகள் ஆந்திர மாநில அரசுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அதை மதிக்காமல் தடுப்பணைகளை கட்ட ஆந்திர அரசு அனுமதி அளிக்கிறது என்றால், தமிழகத்துடனான நல்லுறவை ஆந்திரா மதிக்கவில்லை என்பது தான் பொருள். ஆந்திரத்தின் இந்த அத்துமீறலை அனுமதிக்க முடியாது.

    சித்தூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஏற்கனவே ஆந்திர அரசு ஓர் அணை கட்டி உள்ளது. இப்போது மேலும் இரு அணைகள் கட்டப்பட்டால் கொசஸ்தலையாற்றில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. பூண்டி ஏரிக்கும் தண்ணீர் வராது. அதனால் ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை இழந்து விடும். ஒரு கோடிக்கும் கூடுதலான மக்களை கொண்ட சென்னை மாநகரத்திற்கும் குடிநீர் கிடைக்காது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு.

    2017-ம் ஆண்டில் கொசஸ்தலை ஆற்றிலும், அதன் துணை ஆறுகளிலும் 5 தடுப்பணைகளைக் கட்ட ஆந்திர அரசு திட்டமிட்டது. அதை எதிர்த்து அப்போது நான் தான் முதலில் குரல் கொடுத்தேன். புதிய தடுப்பணைகள் கட்டப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்தினேன்.

    அதைத்தொடர்ந்து மற்ற கட்சிகளும் தடுப்பணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதன் காரணமாக அப்போது புதிய தடுப்பணைகள் கட்டும் திட்டம் கைவிடப்பட்டது.

    கொசஸ்தலை ஆற்றில் புதிய அணைகள் கட்டப்படுவதை கைவிட வலியுறுத்தியும், அதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளக்கோரியும் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரத்தில் வரும் 30-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்பட உள்ளது. அந்தப் போராட்டத்திற்கு நான் தலைமையேற்க உள்ளேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டில் கல்வி நிறுவனப்பகுதிகளில் தான் போதைப்பொருள் அதிகம் விற்பனையாகிறது.
    • படிப்புக்காக வீடுகளை விட்டு வந்து விடுதிகளிலும், தனியாக அறை எடுத்தும் தங்கியுள்ள இளைஞர்கள் எளிதாக போதைப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப் பொருள் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. போதைக் கலாச்சாரத்தால் மிகப்பெரிய பேரழிவை நோக்கி தமிழ்நாடு பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் மேற்கொள்ளாதது ஏமாற்றமளிக்கிறது.

    தமிழ்நாட்டில் கல்வி நிறுவனப்பகுதிகளில் தான் போதைப்பொருள் அதிகம் விற்பனையாகிறது. வெளிமாநில மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் அதிக எண்ணிக்கையில் படிக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், தனியார் கல்லூரிகளும் தான் போதைப்பொருட்கள் தடையின்றி பயன்படுத்தப்படும் பகுதிகளாக திகழ்கின்றன. படிப்புக்காக வீடுகளை விட்டு வந்து விடுதிகளிலும், தனியாக அறை எடுத்தும் தங்கியுள்ள இளைஞர்கள் எளிதாக போதைப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.

    அண்மைக்காலமாக கொடிய போதைப் பொருட்கள் மாத்திரைகள் வடிவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சட்டவிரோதமாக விற்கப்படுகின்றன. போதைக்கு அடிமையாகும் மாணவர்களும், இளைஞர்களும் மிகக்குறைந்த வயதிலேயே தங்களின் வாழ்வை முடித்துக் கொள்கின்றனர்.

    காவல்துறையினர் நினைத்தால், போதைப் பொருட்களின் விற்பனையை அடியோடு ஒழித்து விட முடியும். தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நமது விலை மதிப்பற்ற செல்வங்களான இளைய தலைமுறையினரை சீரழித்து விடும். அத்தகைய சீரழிவை தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு.

    தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி வரும் 30-ந் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. சென்னையில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை ஏற்பார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×