search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ம.க. பந்த் போராட்டம்- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை

    • கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் தலைமையில் சுமார் 7 ஆயிரம் போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • பந்த் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ம.க.வினர் 56 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி. நிர்வாகம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்கு விவசாயிகளிடமிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். என்.எல்.சி., கடலூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் போராட்டங்கள் நடத்தினர்.

    மேலும், ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும். வீட்டிற்கு ஒருவருக்கு என்.எல்.சி.யில் நிரந்தர வேலை வேண்டும். மாற்று இடம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆணைவாரி, எரும்பூர், கத்தாழை கிராம மக்கள் வலியுறுத்தினர்.

    இக்கிராம மக்களுக்கு ஆதரவாக பா.ம.க., கட்சி களம் இறங்கியது. அதில் குறிப்பாக என்.எல்.சி. நிறுவனம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டார்.

    இதனையடுத்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கடலூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் என்.எல்.சி. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.

    இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும் பணியை நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதற்கட்டமாக எல்லைகளில் வாய்க்கால் வெட்டும் பணிகள் நடந்தது. இதனை அறிந்து அங்கு திரண்ட பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பணிகள் நடைபெற்றன.

    இதையடுத்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து இன்று கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதனையொட்டி பா.ம.க.வினர் வணிக நிறுவனங்கள், கடைகளின் உரிமையாளர்களிடம் நோட்டீஸ் வழங்கி முழு அடைப்பு போராட்டத்திற்கு கடலூர் மாவட்டம் முழுவதும் ஆதரவு திரட்டினர்.

    அதன்படி இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஆனால், கடலூரில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தது. ஒரு சில கடைகள் மட்டுமே மூடப்பட்டிருந்தது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல இயங்கியது. 5 பஸ்களை ஒன்றிணைத்து போலீஸ் பாதுகாப்புடன் இயக்கினார்கள்.

    புதுவையிலிருந்து கடலூருக்கு வரும் பஸ்கள் மாநில எல்லையான முள்ளோடையில் நிறுத்தப்பட்டது. அங்கு இறக்கிவிடப்பட்ட பயணிகள் ஆட்டோக்கள் மூலம் கடலூருக்கு வந்தனர். கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு, புவனகிரி, மந்தாரக்குப்பம், நெய்வேலி, முத்தாண்டிக்குப்பம் பகுதிகளில் 90 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்தது.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் தலைமையில் சுமார் 7 ஆயிரம் போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், ரோந்து பணியும் தீவிரபடுத்தப்பட்டு இருந்தது.

    பந்த் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ம.க.வினர் 56 பேர் கைது செய்யப்பட்டனர். மந்தாரக்குப்பத்தில் கடைகளை அடைக்கும்படி கூறிய பா.ம.க. முன்னாள் மாவட்ட தலைவர் தர்மலிங்கம் உட்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர். பா.ம.க. முழு அடைப்பு போராட்டம் அறிவித்திருந்தாலும், கடலூரில் வழக்கமான இயல்பு வாழ்க்கை நிலவியது. பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை.

    Next Story
    ×