என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PMK protest"

    • சிறை நிரப்பும் போராட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந்தேதி நடத்துவதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.
    • 17-ந்தேதி நடைபெற உள்ள தொடர்முழக்கப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரியும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வருகிற 17-ந்தேதி (புதன்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடல் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு வசதியாகவும், வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை இன்னும் வலிமையாகவும், பிரமாண்டமாகவும் வலியுறுத்துவதற்கு வசதியாகவும் அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருந்த அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்பும் போராட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந்தேதி நடத்துவதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.

    17-ந்தேதி நடைபெற உள்ள தொடர்முழக்கப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பா.ம.க. நினைத்திருந்தால் போராட்டங்களை நடத்தி, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எப்போதோ வென்றெடுத்திருக்கலாம்.
    • திமுக அரசு இட ஒதுக்கீட்டை வழங்கும் என்று நம்பி தான் ஏமாந்தோம்.

    சென்னை :

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1267 நாள்களாகும் நிலையில், வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்க திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. தமிழகத்தின் பெரும்பான்மை சமூகமான வன்னியர்கள் வாழவே கூடாது; முன்னேறவே கூடாது என்று வன்மம் கொண்டு திமுக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

    வன்னியர்களுக்கு இன்று வரை முழுமையான சமூகநீதி கிடைக்காததற்கான காரணம் திமுக அரசு தான். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 1980-ஆம் ஆண்டு தொடங்கி 1989-ஆம் ஆண்டு வரை நூற்றுக்கணக்கான அறப் போராட்டங்களை மருத்துவர் அய்யா அவர்கள் முன்னெடுத்தார். அந்தப் போராட்டங்களின் ஒரு கட்டமாக 1987-ஆம் ஆண்டு இதே நாளில் ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தை மருத்துவர் அய்யா அவர்கள் தொடங்கினார். இந்தப் போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரலாறு காணாத ஆதரவு பெருகியதை தாங்கிக் கொள்ள முடியாத அன்றைய அரசு காவல்துறையை ஏவி நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டாந்தடி தாக்குதலில் அப்பாவி வன்னியர்கள் 21 பேர் கொல்லப்பட்டனர். சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தங்களின் இன்னுயிரையே ஈந்த அவர்களின் தியாகம் மிகப்பெரியது. அவர்களை நான் வணங்குகிறேன்.

    அதன்பிறகும் நீடித்த போராட்டத்தின் ஓர் அங்கமாக 1989-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல் புறக்கணிப்பின் காரணமாகவே 13 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதற்காக நன்றிக்கடன் செலுத்த வேண்டிய திமுக, ஆட்சிக்கு வந்த இரு வாரங்களிலேயே, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது 12.12.1988ஆம் நாள் ஆளுனரால் பிறப்பிக்கப்பட்டிருந்த அரசாணையை ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மருத்துவர் அய்யா அவர்களை அழைத்துப் பேசிய அன்றைய முதலமைச்சர் கலைஞர், வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க ஒப்புக்கொண்டார். அது மட்டும் செயல்வடிவம் பெற்றிருந்தால், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னிய மக்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு பிரதிநிதித்துவம் பெற்றிருப்பார்கள். ஆனால், வேறு சிலரின் ஆலோசனைப்படி, இரவோடு இரவாக தமது முடிவை மாற்றிக் கொண்ட அன்றைய முதலமைச்சர் கலைஞர், வன்னியர்களுடன் மேலும் 107 சாதிகளைச் சேர்ந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவை உருவாக்கி அதற்கு 20% இட ஒதுக்கீடு வழங்கினார். அன்றைக்கு அழுக வைத்துக் கொடுக்கப்பட்ட கனி தான் இன்று வரை வன்னிய மக்களுக்கு முழுமையான சமூகநீதி கிடைக்காததற்கு காரணமாகும்.

    இட ஒதுக்கீடு பெற்று 32 ஆண்டுகளாகியும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னிய மக்களுக்கு முன்னேற்றம் கிடைக்காததால் தான் 2020-21ஆம் ஆண்டில் மீண்டும் போராட்டங்களை முன்னெடுத்து, அதிமுக ஆட்சியில் 10.50% உள் இட ஒதுக்கீடு பெறப்பட்டது. ஆனால், சமூகநீதி பகைவர்கள் சிலர் அதை எதிர்த்து தொடர்ந்த வழக்கால் வன்னியர் ஒட ஒதுக்கீடு செல்லாமல் போனது. எனினும், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு பெற எல்லா உரிமைகளும் உள்ளது என்று கூறி, உரிய தரவுகளைத் திரட்டி அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 2022 மார்ச் 31-ஆம் நாள் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

    தமிழக அரசு நினைத்திருந்தால், அதிகபட்சமாக ஒரு மாதத்தில் தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். ஆனால், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1267 நாள்களாகியும் இன்று வரை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை. இதற்கான காரணம் இயலாமை அல்ல... வன்னியர்களுக்கு எந்தக் காலத்தில் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது; அவர்கள் கல்வியும், வேலைவாய்ப்பும் பெறாமல் சமூகத்தின் அடிமட்டத்திலேயே கிடக்க வேண்டும் என்ற வன்மம் தான் இதற்கு காரணமாகும்.

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை திமுக பல தருணங்களில் வெளிப்படையாக உணர்த்தியிருக்கிறது. 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் வன்னியர் இடஓதுக்கீட்டுச் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்ட போது, அதை திட்டமிட்டே திமுக புறக்கணித்தது. அதுமட்டுமின்றி, 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வன்னியர் அல்லாத பிற சமூகங்களின் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக பரப்புரை செய்தது. வன்னியர் மீதான அந்த வன்மத்தின் தொடர்ச்சியாகவே மூன்றரை ஆண்டுகளாகியும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திராவிட மாடல் அரசு மறுத்து வருகிறது.

    உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த நாள் முதல் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்து வந்த திமுக அரசு, இப்போது சாதிவாரி மக்கள்தொகை விவரம் இல்லாததால் தான் இடஒதுக்கீடு வழங்க முடியவில்லை என்று கூறுகிறது. வன்னியர்களுக்கு இடஓதுக்கீடு வழங்க சாதிவாரி மக்கள் தொகை விவரங்களைத் திரட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பில் கூறவில்லை. ஒருவேளை மக்கள்தொகை விவரங்கள் தேவை என்றாலும் கூட அதை சேகரிப்பது தான் தமிழக அரசு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கடமை ஆகும். அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க போதிய சாதிவாரி விவரங்கள் இல்லாத நிலையில், அதற்காக அமைக்கப்பட்டிருந்த நீதியரசர் நாகமோகன்தாஸ் ஆணையம் 63 நாள்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, 165 நாள்களில் ஒட்டுமொத்த அறிக்கையையும் தாக்கல் செய்திருக்கிறது. தமிழகத்தை ஆளும் திமுக அரசு நினைத்திருந்தால் அதை விட குறைவாக காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இட வழங்கியிருக்க முடியும். ஆனால், வன்னியர் மீதான வெறுப்புணர்வு தான் அதை தடுத்து விட்டது.

    பா.ம.க. நினைத்திருந்தால் போராட்டங்களை நடத்தி, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எப்போதோ வென்றெடுத்திருக்கலாம். ஆனால், திமுக அரசு இட ஒதுக்கீட்டை வழங்கும் என்று நம்பி தான் ஏமாந்தோம். இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் தான் இப்போது சிறை நிரப்பும் போராட்டம் என்ற ஆயுதத்தை நாம் கைகளில் எடுத்திருக்கிறோம். இனி இட ஒதுக்கீட்டை வென்றெடுக்காமல் ஒருபோதும் பாமக ஓயாது.

    உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1267 நாள்கள் ஆகியும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசைக் கண்டித்தும், இனியாவது சமூகநீதி துரோகத்தைக் கைவிட்டு வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியும் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 11.00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்புரீதியிலான அனைத்து மாவட்டங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். நான் உள்ளிட்ட பாம..க. மூத்த தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்கும் இடங்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும். குறைந்தது 5 லட்சம் பேராவது இந்தப்போராட்டத்தில் பங்கேற்று சிறை செல்லத் தயாராக இருக்க வேண்டும். எனவே, பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    பாட்டாளி சொந்தங்களே.... வாருங்கள் களம் காணுவோம், வன்னியர் சமூகநீதியை வென்றெடுப்போம்! என்று கூறியுள்ளார். 

    • ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
    • ஆர்ப்பாட்டத்தையொட்டி விழுப்புரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    விழுப்புரம்:

    உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1200 நாட்கள் ஆகியும் வன்னியர் இடஒதுக்கீடு 10.5 சதவீதம் வழங்க மறுக்கும் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என டாக்டர் அன்புமணி அறிவித்திருந்தார்.

    அதன் விழுப்புரம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள நகராட்சி மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு டாக்டர் அன்புமணி தலைமை தாங்கினார். இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தையொட்டி விழுப்புரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்த நிலையில் அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

    • பிற சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தப் போராட்டம் தான் காரணமாக அமைய இருக்கிறது.
    • நாம் வென்றெடுத்த அனைத்து சமூகநீதிகளுக்கும் அடிப்படையாக அமைந்தது பாட்டாளிகளான உங்களின் போராட்டம் தான்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் உழைக்கும் வர்க்கமான வன்னிய மக்களுக்கு துரோகம் இழைக்கும் வரலாற்றில் சமூக அநீதி அரசான தி.மு.க. அரசு, இன்னும் இரு மைல்கற்களை கடந்திருக்கிறது. முதலாவதாக, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1200 நாட்களாகும் நிலையில், இதுவரை அதை நிறைவேற்றவில்லை.

    2-ஆவதாக, வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட 30 மாதக்கெடு நிறைவடைந்து விட்ட நிலையில், ஆணையத்திடம் இருந்து அறிக்கை பெறுவதற்கு பதிலாக காலநீட்டிப்பு வழங்கி துரோகம் செய்திருக்கிறது.

    தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றில் ஓர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக ஓர் ஆணையம் அதன் அறிக்கையை தாக்கல் செய்ய அதிக காலம் எடுத்துக் கொள்வது இது தான் முதல் முறையாகும். இஸ்லாமியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க 14.7.2006-ம் நாள் அமைக்கப்பட்ட நீதிபதி ஜனார்த்தனம் ஆணையம் அதன் அறிக்கையை 6 மாதங்களில் தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து 15.9.2007-ம் நாள் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

    அதேபோல், அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க 25.3.2008-ம் நாள் அமைக்கப்பட்ட நீதிபதி ஜனார்த்தனம் ஆணையம் 243 நாள்களில் அதே ஆண்டு நவம்பர் 22-ம் நாள் பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்தது. அதன்பின் 2009 பிப்ரவரி 26-ம் நாள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதைவிட பல மடங்கு, அதாவது 915 நாட்கள் ஆகி விட்ட நிலையிலும் ஆணையம் அதன் அறிக்கையை தாக்கல் செய்யாமல் தாமதித்து வருகிறது.

    வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த அறிக்கையை ஆணையம் முதன்முதலில் அதற்கு வழங்கப்பட்ட 3 மாத காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்து, அதனடிப்படையில் சட்டம் இயற்றப்பட்டிருந்தால் கடந்த 4 ஆண்டுகளில் வன்னிய மாணவர்களுக்கு 3 ஆயிரத்து 600 எம்.பி.பி.எஸ் இடங்களும், 700-க்கும் கூடுதலான மருத்துவ மேற்படிப்பு இடங்களும் கிடைத்திருக்கும்.

    அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தரவரிசையில் முதல் 25 இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும், கலைக்கல்லூரிகளில் 80 ஆயிரத்துக்கும் கூடுதலான இடங்களும், சட்டக்கல்லூரிகளில் ஆயிரத்துக்கும் கூடுதலான இடங்களும் கிடைத்திருக்கும். மேலும் அரசுத்துறைகளில் வன்னியர்களுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு வேலைகள் கிடைத்திருக்கும். இயல்பாக கிடைக்க வேண்டிய இந்த உரிமைகளை பறித்து தி.மு.க. அரசு பெருந்துரோகம் செய்திருக்கிறது.

    தி.மு.க. அரசின் சமூக அநீதியை அம்பலப்படுத்துவதன் வாயிலாகவும், டா்கடர் அய்யா வழிகாட்டுதல்களில் கடந்த காலங்களில் நடத்தப்பட்டது போன்ற தீவிரமான அறப்போராட்டங்களை முன்னெடுப்பதன் வாயிலாகவும் தான் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க முடியும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. அதன் தொடக்கமாகத் தான் வன்னியர் சங்கம் நிறுவப்பட்ட நாளான ஜூலை 20-ம் நாள், இட ஒதுக்கீட்டுக்காக போராளிகள் இன்னுயிர் ஈந்த மண்ணான விழுப்புரத்தில் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நடத்த தீர்மானித்திருக்கிறோம்.

    நாம் வென்றெடுத்த அனைத்து சமூகநீதிகளுக்கும் அடிப்படையாக அமைந்தது பாட்டாளிகளான உங்களின் போராட்டம் தான். அந்த வகையில் இப்போதும் நமக்கான சமூகநீதியை வென்றெடுக்கவும், அதனடிப்படையில் பிற சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தப் போராட்டம் தான் காரணமாக அமைய இருக்கிறது.

    இதை மனதில் கொண்டு பா.ம.க. வன்னியர் சங்கம் உள்ளிட்ட அதன் இணை மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளும், பாட்டாளித் தொண்டர்களும் விழுப்புரம் மண்ணில் படை திரள்வோம், தி.மு.க.வின் துரோகத்தை தோலுரித்துக் காட்டி நமக்கான சமூக நீதியை வென்றெடுப்போம் என்று உங்களை அழைக்கிறேன். வன்னிய மக்களின் சமூகநீதிக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக, பாட்டாளி சொந்தங்களாகிய உங்களை எதிர்பார்த்து விழுப்புரத்தில் காத்திருப்பேன்.

    இ்வவாறு அவர் கூறியுள்ளார்.

    • சேத்தியாத்தோப்பை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    • கலவரம் ஏதேனும் நடந்தால் அதனைக் கட்டுப்படுத்த வஜ்ரா, வருண் போன்ற வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

    சேத்தியாத்தோப்பு:

    என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நெய்வேலி அருகேயுள்ள ஆணைவாரி, எரும்பூர், காரிவெட்டி, வளையமாதேவி, கத்தாழை போன்ற பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்தது. இதற்கு அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கிராமத்திற்குள் விடாமல் தடுத்து நிறுத்தினர்.

    மேலும், இக்கிராம மக்களுக்கு ஆதரவாக பா.ம.க., த.வா.க. போன்ற கட்சிகளும் களம் இறங்கின. அதில் குறிப்பாக என்.எல்.சி. நிறுவனம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் பா.ம.க. தலைவர் அண்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டார்.

    இதனையடுத்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கடலூர் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் என்.எல்.சி. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.

    இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும் பணியை இன்று தொடங்கியது. இதில் முதற்கட்டமாக எல்லைகளில் வாய்க்கால் வெட்டும் பணிகள் நடக்கிறது. ஒவ்வொரு முறையும் பணிகளை தொடங்கும் போது கிராம மக்களின் போராட்டம், பா.ம.க. போன்ற கட்சிகளின் போராட்டம் நடைபெறும். அது போல இந்த முறை போராட்டம் நடைபெற்றால் அதனை தடுக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

    இவர்கள் சேத்தியாத்தோப்பை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    என்.எல்.சி. சுரங்க விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வினர் மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டிலும், வடக்குத்து ஜெகன், செல்வமகேஷ் தலைமையில் வளையமாதேவியிலும் மறியலில் ஈடுபட்டனர்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், துணை சூப்பிரண்டு ரூபன்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அங்கு மறியலில் ஈடுபட்டிருந்த பா.ம.க.வினரை கைது செய்தனர்.

    மேலும், கலவரம் ஏதேனும் நடந்தால் அதனைக் கட்டுப்படுத்த வஜ்ரா, வருண் போன்ற வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சேத்தியாத்தோப்பு பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.

    • கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் தலைமையில் சுமார் 7 ஆயிரம் போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • பந்த் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ம.க.வினர் 56 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி. நிர்வாகம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்கு விவசாயிகளிடமிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். என்.எல்.சி., கடலூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் போராட்டங்கள் நடத்தினர்.

    மேலும், ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும். வீட்டிற்கு ஒருவருக்கு என்.எல்.சி.யில் நிரந்தர வேலை வேண்டும். மாற்று இடம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆணைவாரி, எரும்பூர், கத்தாழை கிராம மக்கள் வலியுறுத்தினர்.

    இக்கிராம மக்களுக்கு ஆதரவாக பா.ம.க., கட்சி களம் இறங்கியது. அதில் குறிப்பாக என்.எல்.சி. நிறுவனம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டார்.

    இதனையடுத்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கடலூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் என்.எல்.சி. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.

    இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும் பணியை நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதற்கட்டமாக எல்லைகளில் வாய்க்கால் வெட்டும் பணிகள் நடந்தது. இதனை அறிந்து அங்கு திரண்ட பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பணிகள் நடைபெற்றன.

    இதையடுத்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து இன்று கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதனையொட்டி பா.ம.க.வினர் வணிக நிறுவனங்கள், கடைகளின் உரிமையாளர்களிடம் நோட்டீஸ் வழங்கி முழு அடைப்பு போராட்டத்திற்கு கடலூர் மாவட்டம் முழுவதும் ஆதரவு திரட்டினர்.

    அதன்படி இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஆனால், கடலூரில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தது. ஒரு சில கடைகள் மட்டுமே மூடப்பட்டிருந்தது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல இயங்கியது. 5 பஸ்களை ஒன்றிணைத்து போலீஸ் பாதுகாப்புடன் இயக்கினார்கள்.

    புதுவையிலிருந்து கடலூருக்கு வரும் பஸ்கள் மாநில எல்லையான முள்ளோடையில் நிறுத்தப்பட்டது. அங்கு இறக்கிவிடப்பட்ட பயணிகள் ஆட்டோக்கள் மூலம் கடலூருக்கு வந்தனர். கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு, புவனகிரி, மந்தாரக்குப்பம், நெய்வேலி, முத்தாண்டிக்குப்பம் பகுதிகளில் 90 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்தது.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் தலைமையில் சுமார் 7 ஆயிரம் போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், ரோந்து பணியும் தீவிரபடுத்தப்பட்டு இருந்தது.

    பந்த் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ம.க.வினர் 56 பேர் கைது செய்யப்பட்டனர். மந்தாரக்குப்பத்தில் கடைகளை அடைக்கும்படி கூறிய பா.ம.க. முன்னாள் மாவட்ட தலைவர் தர்மலிங்கம் உட்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர். பா.ம.க. முழு அடைப்பு போராட்டம் அறிவித்திருந்தாலும், கடலூரில் வழக்கமான இயல்பு வாழ்க்கை நிலவியது. பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை.

    • பாகூர் பகுதியை சேர்ந்த பா.ம.க.வினர் பஸ் இயக்கப்படுவதை கண்டித்து புதுவை எல்லையான முள்ளோடையில் அரசு பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை கிருமாம்பாக்கம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    பாகூர்:

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து இன்று கடலூர் மாவட்டம் முழுவதும் பந்த் போராட்டம் நடைபெறும் என்று பா.ம.க. தலைவர் ராமதாஸ் அறிவித்தார்.

    பா.ம.க.வினர் வணிக நிறுவனங்கள் கடைகளின் உரிமையாளரிடம் நோட்டீஸ் வழங்கி முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினர்.

    ஆனால் கடலூரில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. புதுவையில் இருந்து கடலூர் செல்ல போலீசார் ஏற்பாடு செய்து இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாகூர் பகுதியை சேர்ந்த பா.ம.க.வினர் பஸ் இயக்கப்படுவதை கண்டித்து புதுவை எல்லையான முள்ளோடையில் அரசு பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை கிருமாம்பாக்கம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    • மாவட்டம் முழுவதும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • போலீசார் பா.ம.க. நிர்வாகிகளை சூழ்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கடலூர்:

    என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் விவசாயிகளின் நிலத்தில் 2-வது சுரங்க விரிவாக்க பணி தொடங்கப்பட்டது. இதனை கண்டித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணி மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வந்தனர். மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ம.க. நிர்வாகிகள் 56 பேரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதுமட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை அருகே பா.ம.க.மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட தலைவர் தடா.தட்சிணாமூர்த்தி, மாணவரணி கோபிநாத், கவுன்சிலர் சரவணன், இளைஞரணி சந்திரசேகர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரண்டனர்.

    அப்போது அங்கிருந்த போலீசார் பா.ம.க. நிர்வாகிகளை சூழ்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் பா.ம.க. நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் இந்தப் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறி பா.ம.க. நிர்வாகிகளை அதிரடியாக கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • போராட்டத்தின் போது தென்னை மரக்கன்று, கரும்பு பயிர், நெற்பயிர்களை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுத்தனர். மேலும் அங்கு இருந்த பேரி கார்டுகளை போட்டு தடுத்தனர்.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வினர் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தமிழகத்தில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவாகவும், என்.எல்.சி. நிறுவனம் மற்றும் தமிழக அரசை கண்டித்து புதுச்சேரி- கடலூர் எல்லையான முள்ளோடை நுழைவு வாயிலில் புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி, துணை அமைப்பாளர் வடிவேலு தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தின் போது தென்னை மரக்கன்று, கரும்பு பயிர், நெற்பயிர்களை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுத்தனர். மேலும் அங்கு இருந்த பேரி கார்டுகளை போட்டு தடுத்தனர்.

    தகவல் அறிந்த பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். போராட்டத்தை கைவிட மறுத்ததால் இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதற்கிடையே சிலர் தாங்கள் மறைத்து வைத்து இருந்த லாரி டயரை எடுத்து வந்து போராட்டம் நடந்த இடத்தில் போட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தி சாலையில் போட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக பா.ம.க.வினர் 28 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆர்ப்பாட்டத்தையொட்டி ஐ.ஜி. கண்ணன் தலைமையில் வெளிமாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார் நெய்வேலிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள 3 திறந்த வெளிசுரங்கங்களை அமைத்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல் மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த மின்சாரம் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

    இதனிடையே நிலக்கரி எடுக்க போதிய இடமில்லை எனவும், நிலக்கரி தட்டுப்பாட்டால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் 1,000 மெகாவாட் மின் உற்பத்தியை நிறுத்தப்போவதாக என்.எல்.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

    எனவே 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் ஏற்கனவே என்.எல்.சி.யால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் நேற்று முன்தினம் முதல் முதற்கட்ட பணியை தொடங்கியது.

    அந்த நிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் அனைத்தும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்றும் இந்த பணி 2-வது நாளாக தொடர்ந்தது.

    மேலும் என்.எல்.சி. சுரங்க நீரை வெளியேற்றுவதற்காக பரவனாறுக்கு பதிலாக புதிய பரவனாறு அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இதற்காக நேற்று காலை ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் வளையமாதேவியில் இருந்து கரிவெட்டிக்கு செல்லும் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, 10 ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டது.

    மேலும் தர்மநல்லூரில் இருந்து வளையமாதேவி வரை 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய பரவனாறு வெட்டப்பட்டது. இதற்கு விவசாயிகள் மற்றும் பா.ம.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்றது.

    இதனை கண்டித்து பா.ம.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் பஸ்களின் கண்ணாடியும் உடைக்கப்பட்டன.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

    என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஏற்கனவே பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. கடையடைப்பு போராட்டமும் நடத்தினர். தமிழகத்தை விட்டு என்.எல்.சி. வெளியேற வேண்டும் என பா.ம.க.வினர் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் வளையமாதேவியில் விவசாய விளைநிலங்களை அழித்து வாய்க்கால் வெட்டும் பணிக்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று அறிவித்தார். கும்பகோணம்-பண்ருட்டி சாலையில் என்.எல்.சி. ஆர்ச் கேட் அருகே இந்த போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நண்பகல் 12.05 மணியளவில் நெய்வேலி வந்தார்.

    நெய்வேலி ஆர்ச் கேட் அருகே நடைபெற்ற முற்றுகையில் அவர் பங்கேற்றார். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் வெளியேறு வெளியேறு என்.எல்.சி.யே வெளியேறு, வெளியேற்று... வெளியேற்று... மத்திய-மாநில அரசுகளே என்.எல்.சி. நிர்வாகத்தை உடனடியாக வெளியேற்று. விட மாட்டோம்... விடமாட்டோம்... ஒருபிடி மண்ணை கூட விடமாட்டோம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    பா.ம.க. ஆர்ப்பாட்டத்தையொட்டி கடலூர் மாவட்டத்தில் 27 டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று மாலை 6 மணி வரை மூடப்படுகிறது.

    ஆர்ப்பாட்டத்தையொட்டி ஐ.ஜி. கண்ணன் தலைமையில் வெளிமாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார் நெய்வேலிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மேற்பார்வையில் 5 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 17 டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதுமட்டுமின்றி கடலூர் மாவட்ட போலீசார் ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பா.ம.க.வினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக நெய்வேலியில் பரப்பான சூழ்நிலை நிலவியது.

    • விளை நிலத்தில் வாய்க்கால் வெட்டுவதை கண்டித்து பா.ம.க.வினர் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஒருசில இடங்களில் பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. நேற்று இரவும் 5 பஸ்கள் மீது கற்களை வீசி கண்ணாடி உடைக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் 2-வது சுரங்கத்தின் விரிவாக்கத்திற்காக சேத்தியாததோப்பு அருகே உள்ள கற்றாழை, கரி வெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

    வளையமாதேவியில் பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியது. இதற்காக அங்கு பயிரிடப்பட்ட நெற் பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்து பணிகளை தொடங்கினார்கள்.

    இதனால் விவசாயிகள் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அழிக்கப்படுவதை கண்டித்து பா.ம.க. சார்பில் அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வன்முறை வெடித்தது.

    போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர். இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அன்புமணி ராமதாஸ் உள்பட 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 28 பேரை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விளை நிலத்தில் வாய்க்கால் வெட்டுவதை கண்டித்து பா.ம.க.வினர் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருசில இடங்களில் பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. நேற்று இரவும் 5 பஸ்கள் மீது கற்களை வீசி கண்ணாடி உடைக்கப்பட்டது. கடந்த 3 நாட்களில் மட்டும் 25 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

    பா.ம.க.வினர் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து நேற்று மாலை 6 மணி முதல் கடலூரில் இருந்து பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர். இன்று காலை முதல் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    • மின் கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • மாதந்தோறும் மின்கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. அரசு இன்னும் ஏன் நிறைவேற்றவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார்.

    மேலும், கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., வக்கீல் பாலு, சிவக்குமார் எம்.எல்.ஏ., திருக்கச்சூர் ஆறுமுகம் முன்னாள் எம்.எல்.ஏ., சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் வடிவேல் உள்பட பலர் பங்கேற்றார்கள். ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 3 முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மாதந்தோறும் மின்கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. அரசு இன்னும் ஏன் நிறைவேற்றவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட போராட்டத்தில் கலந்துகொண்டோர் மீது எழும்பூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் பலரும் மின்விசிறி, தொலைக்காட்சியை உடைத்ததாக கூறப்படுகிறது.

    ×