search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramadoss"

    • பட்ஜெட்டில் மாநிலங்களுக்குள் பாரபட்சம் காட்டக்கூடாது.
    • மணல் கொள்ளை குறித்து தகவல் தரும் பொதுமக்கள் மிரட்டப்படுகின்றனர்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் இரு ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் மின்வாரியம் நஷ்டத்தைத்தான் சொல்கிறது. ரூ 18,400 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தும் ரூ 10 ஆயிரம் கோடியாக நஷ்டம் அதிகரித்துள்ளது. 22-ம் ஆண்டு ரூ 36500 கோடியும், 23-ம் ஆண்டு வணிக நிறுவனங்கள் மூலம் 34 ஆயிரம் கோடி கிடைத்தும் 3420 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. இதன் மூலம் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பது தெரியவருகிறது. ஒவ்வொரு முறையும் மின்கட்டணமாக ரூ 2400 கோடி கூடுதல் வருவாய் கிடைப்பதாக அரசு கூறுகிறது. கட்டண உயர்வுக்கு பின்னும் நஷ்டத்தில் உள்ளது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டம் குறித்த வடிவம், தேதி குறித்த கூட்டுப்பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் முதல்வாரத்தில் கூடி தேதி முறைப்படி அறிவிக்கப்படும்.

    திண்டிவனம்-நகரி ரெயில்பாதை பணிகளுக்கு கணிசமான நிதி உதவி ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டிவனம்-திருவண்ணாமலை ரெயில் பாதைக்கு 696 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி கொடுக்கவேண்டும். கிழக்கு கடற்கரை பாதை திட்டத்திற்கு ரூ 205 கோடி ஒதுக்கி இருப்பது போதுமானதல்ல.

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் மேட்டூர் அணை நீர்மட்டம் 92 அடியை கடந்துவிட்டது. குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவது குறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மணல் கொள்ளை குறித்து தகவல் தரும் பொதுமக்கள் மிரட்டப்படுகின்றனர். கரும்பு சாகுபடி படிப்படியாக குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் தமிழக சர்க்கரை ஆலைகளை மூடவேண்டிய நிலை ஏற்படும். இதை தடுக்க கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    பள்ளி மேலாண்மை குழுக்களில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டு இவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல. அரசுத்துறையின் தற்காலிகப்பணிகளுக்கு ரூ 20 ஆயிரம் நிர்ணயிக்கப்படவேண்டும். அமைப்புச்சாரா தினக்கூலி தொழிலாளர்களுக்கு தினமும் ரூ. 600 வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தற்காலிக ஊழியர்களுக்கு ரூ 200 வழங்குவது தொழிலாளர் விரோத போக்காகும்.

    பட்ஜெட்டில் மாநிலங்களுக்குள் பாரபட்சம் காட்டக்கூடாது. தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வாங்கியும். ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவதும் சுரண்டலே ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் உடனிருந்தார்.

    இந்த லிங்கை கிளிக் செய்யவும்- அய்யாவின் 86-ஆம் பிறந்தநாளில் சமூகநீதி காக்க உறுதியேற்போம்!- அன்புமணி ராமதாஸ்

    • ராமதாசின் 86-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் 86-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கோடிக்கணக்கான சொந்தங்களில் ஒருவனாக ஈடு இணையற்ற அந்த பெருந்தலைவனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • அவருக்கும் நிறைவேறாத சில ஆசைகள் இன்னும் இருக்கின்றன.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,

    அருஞ்சொல் பொருள் அகராதியில் சமூகநீதி என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்க்குலத்தின் முதல்வன் மருத்துவர் அய்யா அவர்களுக்கு இன்று 86-ஆம் பிறந்தநாள். அவரால் வாழ்வு பெற்ற கோடிக்கணக்கான சொந்தங்களில் ஒருவனாக ஈடு இணையற்ற அந்த பெருந்தலைவனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆயிரம் பிறை கண்டும் இன்னும் ஓய்வு என்பதை அறியாமல் தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பிதாமகன் அவர். இளம் வயதில் கல்விக்காக அவர் பட்ட பாடுகள் தான், எனக்கிருந்த தடைகள் வேறு எவருக்கும் வந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில், இன்றைய தலைமுறை எளிதாக கல்வி கற்கத் தேவையான அனைத்தையும் போராடி பெற்றுத்தர வைத்திருக்கிறது அந்த பெரிய மனிதரை.

    6 வகையான இட ஒதுக்கீட்டில் தொடங்கி தமிழ்நாட்டு மாணவர்களை முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த நுழைவுத்தேர்வை ரத்து செய்தது வரை தமிழ்நாட்டில் சமூகநீதிக்கான புரட்சிகளை தலைமையேற்று சாதித்த சமூகநீதிக் காவலர் அவர்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராகவும், 35வயதில் இந்தியாவின் இளம் சுகாதாரத்துறை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் போராளியாகவும் பொறுப்பேற்று நாட்டு மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்தது, அதற்காக பல்வேறு

    விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றது உள்ளிட்ட நான் பெற்ற பேறுகள் அனைத்திற்கும் காரணம் நீங்கள் தான் அய்யா.

    என்னைப்போலவே, உலகின் 140 நாடுகளில் பல்வேறு பெரும் பொறுப்புகளை வகித்து லட்சக்கணக்கான இளைஞர்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு காரணமான தனிப்பெரும் நாயகன் மருத்துவர் அய்யா.

    ஆனாலும், அவருக்கும் நிறைவேறாத சில ஆசைகள் இன்னும் இருக்கின்றன. சமூகநீதி, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் சார்ந்த மருத்துவர் அய்யா அவர்களின் அனைத்துக் கனவுகளையும் நனவாக்குவதற்காக கடுமையாக உழைக்க இந்த நன்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்! என்று கூறியுள்ளார்.

    • வன்னியர் இடஒதுக்கீட்டு கோரிக்கையின் தீவிரம் புரியாமல், கால்பந்து போன்று அக்கோரிக்கையை அரசும், ஆணையமும் உதைத்து ஆடுவது கண்டிக்கத்தக்கது.
    • ஆணையத்தின் பதவிக்காலமே இன்னும் 15 மாதங்கள் மட்டும் தான் உள்ளன

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டா் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கு 10.50சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிந்துரைக்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில், இதுவரை காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை. இன்னொருபுறம், வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க மேலும் ஓராண்டு காலம் தேவை என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கோரியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வன்னியர் இடஒதுக்கீட்டு கோரிக்கையின் தீவிரம் புரியாமல், கால்பந்து போன்று அக்கோரிக்கையை அரசும், ஆணையமும் உதைத்து ஆடுவது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்டது. அதன் பதவிக்காலமே இன்னும் 15 மாதங்கள் மட்டும் தான் உள்ளன. அதற்குள் வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க 12 மாதங்கள் கூடுதல் காலக்கெடு கோருவது தமிழ்நாடு அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இணைந்து நடத்தும் காலம் தாழ்த்தும் நாடகமாகவே தோன்றுகிறது.

    தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்காக உச்சநீதிமன்றம் வகுத்துத் தந்த பாதை தெளிவாக கண்களுக்குத் தெரிகிறது. அந்தப் பாதையில் பயணிப்பதற்கு பதிலாக இடது புறத்தில் திரும்பலாம் என தமிழக அரசும், வலதுபுறத்தில் திரும்பலாம் என பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் மீண்டும், மீண்டும் தவறாக வழி நடத்திக் கொண்டிருக்கக் கூடாது.

    வன்னியர்களின் வரமான இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர்களும் தயாராகவே உள்ளனர். அதற்கு இடம் கொடுக்காமல், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த பரிந்துரையை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் இருந்து விரைவாக பெற்று, சட்டமியற்றி வன்னியர்களுக்கான சமூகநீதியை வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 2023-24ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிலையான நிதிநிலை அறிக்கையில் இந்த 3 துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
    • தொழிலாளர்கள் தங்குவதற்காக வாடகை வீடுகள் கட்டித்தரப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை.

    பாமக நிறுவனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தங்கம், வெள்ளி, செல்பேசிகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டிருப்பது. இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது. வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பது போன்றவை வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான பழைய வருமானவரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாததும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாததும் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன.

    ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கடந்து மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்றால், கல்வி, சுகாதாரம், வேளாண்மை ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். 2023-24ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிலையான நிதிநிலை அறிக்கையில் இந்த 3 துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

    வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1.52 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேளாண் ஆராய்ச்சி ஊக்குவிக்கப்படும். காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய, அதிக விளைச்சல் தரக்கூடிய 109 பயிர் வகைகள் அறிமுகம் செய்யப்படும். அடுத்த இரு ஆண்டுகளில் ஒரு கோடி உழவர்கள் இயற்கை விவசாயத்திற்கு மாற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஊரக வளர்ச்சித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.2.66 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும். ஏழைக் குடும்பங்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் இலவசமாக அரிசி வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை. இவை வேளாண் வளர்ச்சிக்கும், கிராமப்புற வறுமை ஒழிப்புக்கும் வழி வகுக்கும்.

    அடுத்து வரும் ஆண்டுகளில் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக ரூ.2 லட்சம் கோடி செலவிடப்படும். ஒரு கோடி இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகை.

    ஒருமுறை உதவியாக ரூ.6,000 நிதியுடன் தொழில்பழகுனர் பயிற்சி அளிக்கப்படும். முதல் முறையாக வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு முதல் மாதத்தில் மட்டும் இரட்டை ஊதியம் வழங்கப்படும், அரசின் வேறு எந்த சலுகைகளையும் பெறாதவர்களுக்கு கல்விக் கடனாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். தொழிலாளர்கள் தங்குவதற்காக வாடகை வீடுகள் கட்டித்தரப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை.

    தங்கம் மற்றும் வெள்ளி கடத்தலைத் தடுக்க அவற்றின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி முழுமையாக குறைக்கப்படவில்லை என்றாலும் கூட. 15 விழுக்காட்டிலிருந்து 6% ஆக குறைகப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியதாகும். அதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.4200 வரை குறையக் கூடும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது மட்டுமின்றி, தங்கம் கடத்தி வரப்படுவதையும் தடுக்கும். செல்பேசிகள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டிருப்பதால் அவற்றின் விலையும் குறையும்.

    நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது வருமான வரிகளில் மாற்றங்கள் செய்யப்படுமா? என்பதைத் தான். புதிய வருமானவரி முறையில் சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. அதனால், ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.17,500 வரை மிச்சமாகும் என்பது வரவேற்கத்தக்கது.

    ஆனால், பழைய வருமான வரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. புதிய வருமானவரி முறை செலவுகளை ஊக்குவிக்கக்கூடியது. பழைய வருமான வரி முறை சேமிப்பை ஊக்குவிக்கக் கூடியதாகும். புதிய வருமானவரி முறையில் சலுகை வழங்கியதன் மூலம் செலவுகளை அரசு ஊக்குவிக்கிறது. இது குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றாலும், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சேமிப்புகள் தான் கை கொடுக்கும் என்பதால் பழைய வருமானவரி விகிதங்களிலும் அரசு மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

    ஆந்திரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களுக்கு பல சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புத் திட்டங்களில் ஒன்றான விசாகப்பட்டினம் & சென்னை இடையிலான தொழில்வழிச் சாலை திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும் பயன்கள் கிடைக்கும். அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டம் குறித்தும் எந்த அறிவிப்பும் செய்யப் படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான தேவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு தேவையான உட்கட்டமைப்புத் திட்டங்கள். பாசனத் திட்டங்கள் போன்றவற்றையும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்படும் போது சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • வெளியுறவுத்துறை அமைச்சரையோ, பிரதமரையோ சந்தித்து இது குறித்து பேச எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படும் அவலம் இனியும் தொடரக் கூடாது.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு மீனவர்கள் தாங்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த பகுதிகளில் தான் மீன் பிடித்து வருகின்றனர் என்ற போதிலும், அவர்களை சிங்களக் கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கண்டிக்கத்தக்கது.

    வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்காக விதிக்கப்பட்ட 2 மாத தடைக் காலம் முடிவடைந்து ஜூன் 16-ஆம் தேதி தான் தமிழக மீனவர்கள் வங்கக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதன் பின் 35 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், இதுவரை 7 கட்டங்களில் மொத்தம் 89 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் 35 நாட்களுக்கும் மேலாக சிறையில் வாடும் நிலையில் இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.

    தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து கைது செய்தது மட்டுமின்றி, அவர்களை ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் அடைத்து வைத்திருப்பது மனிதநேயமற்ற செயலாகும். இப்போது கைது செய்யப்பட்டவர்களையும் சேர்த்து 89 மீனவர்கள் சிறையில் வாடி வரும் நிலையில், அவர்களை நம்பியுள்ள குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றன.

    தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய - இலங்கை அதிகாரிகள், தமிழக - இலங்கை மீனவர்கள் ஆகியோர் பங்கேற்கும் பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்து, இந்திய, இலங்கை கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் மீன் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பலமுறை பா.ம.க. வலியுறுத்தியும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. தமிழக முதல்வரோ, ஒவ்வொரு முறை மீனவர்கள் கைது செய்யப்படும் போது வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுவதுடன் அவரது கடமையை முடித்துக் கொள்கிறார். வெளியுறவுத்துறை அமைச்சரையோ, பிரதமரையோ சந்தித்து இது குறித்து பேச எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படும் அவலம் இனியும் தொடரக் கூடாது. மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக மத்திய அரசுக்கு அனைத்து வழிகளிலும் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • அரசிடம் கோரிக்கை வைத்தும், முதல்வரை கோட்டையில் சந்தித்தும் பலன் இல்லை.
    • அனைத்து வன்னியர்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்க 45-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்க கொடியை ஏற்றி வைத்து நிருபர்களை சந்தித்தார்.

    வன்னியர் சங்கம் 1980 ஜூலை 20-ல் தொடங்கப்பட்டது. அதன் முதல் கோரிக்கையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு அதற்கேற்ப எல்லா மக்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பது தான். அந்த வகையில் வன்னியர்களுக்கு மக்கள் தொகையில் 20 விழுக்காடு என்பதனால், அவர்களுக்கு 20 விழுக்காடு கொடுக்க வேண்டும். அதேபோல் வன்னியர்களுக்கு 18-ல் இருந்து 22 ஆக உயர்த்திக் கொடுக்கப்பட வேண்டும்.

    தீர்மானம் நிறைவேற்றி 44 ஆண்டுகள் 11 ஆயிரம் கிராமங்களில் பரப்புரை செய்து மக்களை சந்தித்து மக்களுடைய குறைகளை சொல்லி சர்வ விகிதாச்சாரங்களை பெற்று பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஒரு நாள் சாலை மறியல் ஒரு நாள் ரெயில் மறியல் 7 நாள் தொடர் சாலை மறியல் என பல்வேறு போராட்டங்கள் நடத்தி 10.5 என்ற அளவாவது இடஒதுக்கீடு கொடுங்கள் என்று சொன்னபோது அப்போது இருந்த அ.தி.மு.க. அரசு வழங்கினார்கள். அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்த அரசிடம் கோரிக்கை வைத்தும், முதல்வரை கோட்டையில் சந்தித்தும் பலன் இல்லை.

    45 ஆண்டு காலங்கள் ஆகியது. ஆனால் அந்த கோரிக்கை அப்படியே இருக்கிறது, அதனால் மீண்டும் ஒருமுறை தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவிற்கு மிகப்பெரிய போராட்டத்தை 7 நாள் சாலை மறியலை விட கடுமையாக செய்தால்தான் இந்த அரசு பணியும் அல்லது கொடுக்கும் என்று நம்புகிறோம். இப்போதுள்ள இளைஞர்கள் ஆர்வமாக துடிப்போடு இருக்கிறார்கள். ஏனென்றால் இவ்வளவு நாள் வஞ்சிக்கப்பட்டதை ஏமாற்றப்பட்டது யாரால் எதனால் என்று புரியாமல் இருந்தவர்களுக்கு நாங்கள் புரிய வைத்திருக்கிறோம்.

    அவர்கள் இப்பொழுது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். எனவே இந்த போராட்டம் மிகவும் கடுமையான போராட்டமாக இருக்கும். 45 ஆண்டு அடி எடுத்து வைக்கும் இந்த தினத்தில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு ஒட்டுமொத்த சமுதாயமும் இந்த போராட்டத்திற்கு வரவேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். ஆகையால் அனைத்து வன்னியர்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீடுகளுக்கே மதுவை நேரடியாக கொண்டு வினியோகிக்க அனுமதித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
    • ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே குடிக்கும் முறைக்கு முடிவுகட்டி குடும்பமே மது அருந்தும் கலாச்சாரத்தை உருவாக்கவே வீடு தேடு மதுவை கொண்டு சென்று கொடுக்கும் திட்டம் வழிவகுக்கும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மதுவகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் வினியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து வருவதாகவும் தி எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மையா? வீடுகளுக்கே சென்று மது விற்க திட்டமிடப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் திட்டம் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

    வீடுகளுக்கே கொண்டு சென்று மதுவை விற்பனை செய்வது என்பது மக்கள் நலனை விரும்பும் அரசுகளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத தீமை ஆகும். ஆனால், தமிழக அரசு அத்தகைய தீமையை செய்யாது என்று உறுதியாக கூற முடியவில்லை. அதற்கு காரணம், விளையாட்டு அரங்குகள், பன்னாட்டு நிகழ்வுகள், திருமண விழாக்கள் போன்றவற்றில் மதுவகைகளை வினியோகித்தல், மதுக்கடைகளில் காகிதக் குடுவைகளில் குறைந்த விலையில் மது விற்பனை செய்வது போன்ற புரட்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்யத் துடித்த வரலாறு தமிழக அரசுக்கு உண்டு. அதனால் தான் இந்த செய்தியும் உண்மையாக இருக்குமோ? என்று நம்பத் தோன்றுகிறது.

    மது, புகையிலை எதுவாக இருந்தாலும் நுகர்வோருக்கு எளிதில் கிடைக்காத வகையில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் ஆகும். அதன் மூலம் தான் மது - புகையிலை ஆகியவற்றின் பயன்பாட்டை குறைக்க முடியும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் நம்பிக்கை ஆகும். ஏற்கனவே தெருவுக்குத்தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதால் தான் மாணவர்கள் மதுவை வாங்கிச் சென்று பள்ளிகளில் வைத்து அருந்தும் கொடுமை நிகழ்கிறது. வீடுகளுக்கே மதுவை நேரடியாக கொண்டு வினியோகிக்க அனுமதித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

    போதை குறைந்த மது வீடுகளுக்கே நேரடியாக வினியோகிக்கபட்டால், அது வீடுகளில் உள்ள குழந்தைகளையும், பெண்களையும் சுவைத்துப் பார்க்கத் தூண்டும். காலப்போக்கில் வீட்டில் உள்ள பெண்களையும், பிள்ளைகளையும் மதுவுக்கு அடிமையாக்கவே இந்த வழக்கம் வழிகோலும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே குடிக்கும் முறைக்கு முடிவுகட்டி குடும்பமே மது அருந்தும் கலாச்சாரத்தை உருவாக்கவே வீடு தேடு மதுவை கொண்டு சென்று கொடுக்கும் திட்டம் வழிவகுக்கும்.

    தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த முதலமச்சர் மு.க.ஸ்டாலின், மதுப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான இத்தகைய திட்டங்களை அனுமதிக்கக் கூடாது. மது வகைகளை ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் திட்டம் இருந்தால் அதை தமிழக அரசு கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக அரசும், மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் இணைந்து மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பது ஏழை மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடிய தாக்குதலாகும்.
    • பணவீக்கத்தை சமாளிப்பதற்காக வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு ஓராண்டுக்கு முன்பு வரை அரசு ஊழியர்களுக்கே முழுமையாக வழங்கப்படவில்லை.

    பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 4.83 விழுக்காடு. அதாவது யூனிட்டுக்கு 20 காசுகள் முதல் 55 காசுகள் வரை உயர்த்தப்பட்டிருக்கின்றன. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து எந்த கவலையும் இல்லாமல் இரு ஆண்டுகளுக்குள் மூன்றாவது முறையாக மின்சாரக் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்காக தமிழக அரசும், மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் கூறியுள்ள காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதே அடுத்து வரும் ஐந்தாண்டுகளுக்கு குறைந்தது 6% அல்லது அந்த நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தின் பணவீக்கம். இவற்றில் எது குறைவோ, அந்த அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. அப்போதே அந்த ஆணைக்கு கடும் கண்டனம் தெரிவித்த நான். இனிவரும் ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று வலியுறுத்தினேன். அதையும் மீறி தமிழக அரசும், மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் இணைந்து மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பது ஏழை மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடிய தாக்குதலாகும்.

    பணவீக்கத்திற்கு இணையாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால், அதை தாங்கிக் கொள்ளும் அளவுக்கு தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் வலுப்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டு மக்களில் 80%க்கும் கூடுதலானவர்கள் அமைப்புசாரா தொழில்களை நம்பியிருப்பவர்கள் ஆவர். அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் வேலை கிடைக்குமா? என்பதே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், அவர்களின் வருவாய் பணவீக்கத்திற்கு இணையாக உயருவதற்கு வாய்ப்பே இல்லை. பணவீக்கத்தை சமாளிப்பதற்காக வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு ஓராண்டுக்கு முன்பு வரை அரசு ஊழியர்களுக்கே முழுமையாக வழங்கப்படவில்லை.

    அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தின் மீதான அகவிலைப்படி கடந்த 100 மாதங்களுக்கு மேலாக உயர்த்தப்படவில்லை. இத்தகைய சூழலில் பணவீக்கத்திற்கு இணையாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது ஏழைகளின் வாழ்நிலையை அறியாத மன்னர் வாழ்க்கையை வாழும் ஆட்சியாளர்களால் மட்டுமே சாத்தியமானதாகும்.

    மின்சாரக் கட்டண உயர்வும். அது அறிவிக்கப்பட்டுள்ள நேரமும் தமிழ்நாட்டு மக்களை ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு முட்டாள்களாக கருதுகின்றனர் என்பதையே காட்டுகிறது. ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்துவதற்கான மின்கட்டண உயர்வை அதற்கு முன்பாகவே அறிவித்திருக்க வேண்டும். ஆனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடியும் வரை காத்திருந்து அறிவித்திருப்பதிலிருந்தே அவர்களின் வஞ்சகத்தை புரிந்து கொள்ள முடியும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி இதிலிருந்து தமிழக அரசும். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் தப்ப முடியாது.

    ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படக் கூடும் என்பதால் அந்தக் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று மே மாதத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாட்டு மக்கள் நலனின் தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட வீடுகளுக்கான 2.18% மின்கட்டண உயர்வை ஏற்றுக் கொண்டதைப் போல இப்போதும் ஏற்றுக் கொண்டிருக்கலாம்; இல்லாவிட்டால் ஜூன் 10-ஆம் நாள் விக்கிரவாண்டி தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே கட்டண உயர்வை அறிவித்திருக்கலாம். ஆனால். மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு கட்டண உயர்வை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு இம்முறை கட்டண உயர்வை ஏற்றுக் கொள்ளாததும், விக்கிரவாண்டி தேர்தல் முடிவடைந்த பிறகு கட்டண உயர்வை அறிவிப்பதும் மக்களை அரசு எந்த அளவுக்கு ஏமாற்றுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. இனியாவது அவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

    2022-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வின் மூலம் மின்சார வாரியத்திற்கு ரூ.31,500 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. 2022-23ஆம் ஆண்டின் 7 மாதங்களில் மட்டும் மின்சார வாரியத்திற்கு ரூ.23.863 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. அதற்கு முன் மின் வாரியம் ஆண்டுக்கு சுமார் ரூ.9000 கோடி இழப்பில் இயங்கி வந்தது. மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு 2022-23ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், மின்வாரியத்தின் இழப்பு அந்த ஆண்டில் 10.000 கோடியாக அதிகரித்தது. 2023-ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், அந்த ஆண்டில் ரூ.35,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கக் கூடும். ஆனால், கடந்த ஆண்டும் மின்சார வாரியம் கடும் இழப்பை சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. மின்வாரியத்தின் இழப்புக்கு அங்கு நிலவும் ஊழல்களும், நிர்வாகச் சீர்கேடுகளும் தான் காரணம் என்பது இதிலிருந்தே நன்றாகத் தெரிகிறது. அதை சரி செய்யாமல் மின்கட்டணத்தை மட்டும் உயர்த்துவது ஓட்டை வாளியில் நீர் பிடிப்பதற்கு ஒப்பான செயல் ஆகும்.

    மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.6.000 மிச்சமாகும் வகையில் மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, இன்று வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக, இரு ஆண்டுகளில் 3 முறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி, ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ரூ.15,000 கூடுதல் மின் கட்டணம் செலுத்தும் நிலையை திமுக அரசு உருவாக்கியிருக்கிறது. இதற்கு காரணமானவர்களை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமை ஏற்பார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய. பகுதி. நகர. பேரூர். வட்ட, கிளை நிர்வாகிகளும், இணை மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், நுகர்வோர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் பங்கேற்பர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • சிறப்புப் பொதுவினியோகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்ததை விட இப்போது துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
    • மக்களின் குறைகளை அறிந்து அவற்றை போக்குவது தான் அரசின் கடமை ஆகும்.

    சென்னை :

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை ஒரு தரப்பினருக்கு நிறுத்தவும், மீதமுள்ளவர்களுக்கு விலையை உயர்த்தவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மூன்றாவது முறையாக மின்கட்டண உயர்வு என்ற இடியை ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் மீது இறக்கியுள்ள தமிழக அரசு, துவரம் பருப்பு, பாமாயில் வழங்குவதையும் நிறுத்தி ஏழைகளின் வயிற்றில் மீண்டும், மீண்டும் அடிக்கக் கூடாது.

    2007-ஆம் ஆண்டில் பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்ட போது, அதனால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஓரளவாவது போக்கும் நோக்கத்துடன் பருப்பு, பாமாயில், மளிகை சாமான்கள் வழங்கும் சிறப்பு பொதுவினியோகத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி வழங்கப்பட்டு வந்த உளுந்து, மளிகை சாமான்கள் நிறுத்தப்பட்டு விட்ட நிலையில், இப்போது துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றையும் நிறுத்த தமிழக அரசு முயற்சிப்பது அநீதியாகும்.

    பாமாயில், துவரம்பருப்பு வழங்கும் திட்டத்திற்கான மானியச் செலவு அதிகரித்து விட்டதால், அத்திட்டத்தை கைவிடும்படி நிதித்துறை கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து பருப்பு , பாமாயில் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தவும், பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தும் விவகாரத்தில் அரசின் முடிவைத் தான் அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். அதிகாரிகளின் யோசனைகளை அரசு ஏற்கக் கூடாது. அதிகாரிகளின் யோசனைகளுக்கு கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் செவி சாய்த்திருந்தால் ஓமந்தூரார் ஆட்சியில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்காது; அறிஞர் அண்ணாவின் ஆட்சியில் அது நீட்டிக்கப்பட்டிருக்காது. காமராஜர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டமும், எம்.ஜி.ஆர் ஆட்சியில் சத்துணவுத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்காது.

    சிறப்புப் பொதுவினியோகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்ததை விட இப்போது துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இத்தகைய சூழலில் இத்திட்டத்தை விரிவுபடுத்துவது தான் மக்கள் நல அரசுக்கு அழகாக இருக்குமே தவிர, குறுக்குவது சரியாக இருக்காது. 2021-ஆம் ஆண்டில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உளுந்து வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, அதை செயல்படுத்தாமல் இருக்கும் திட்டத்தையும் சீர்குலைக்க முயல்வது அழகல்ல.

    மக்களின் குறைகளை அறிந்து அவற்றை போக்குவது தான் அரசின் கடமை ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தை இப்போதுள்ள நிலையிலேயே தொடர வேண்டும். ஏற்கனவே வாக்குறுதி அளித்தவாறு உளுந்து வழங்கும் திட்டத்தையும் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • கர்நாடக அணைகளில் 77 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. தினமும் 3.15 டி.எம்.சி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • கர்நாடகத்தின் அநீதியை தமிழக அரசு இனியும் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தினமும் ஒரு டி.எம்.சி (வினாடிக்கு 11,500 கன அடி) தண்ணீரை திறந்து விடும்படி காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 8000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்று பெங்களூருவில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா அறிவித்திருக்கிறார். கர்நாடக அரசின் இந்த நியாயமற்ற முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.

    கபினி அணைக்கு வரும் தண்ணீரை இனி ஒரு மணி நேரம் கூட அணையில் தேக்கி வைக்க முடியாது என்பதால் தான் அணைக்கு வரும் தண்ணீரில் வினாடிக்கு 8000 கன அடி தண்ணீரை திறந்து விட்டு, மீதமுள்ள நீரை தனது பாசனத் தேவைக்காக கர்நாடகம் பயன்படுத்திக் கொள்கிறது. இப்போதும் தமிழ்நாட்டை தனது வடிகாலாகத்தான் கர்நாடகம் பயன்படுத்திக் கொள்கிறதே தவிர, தமிழகத்திற்கு மனமுவந்து தண்ணீர் வழங்கவில்லை.

    கர்நாடக அணைகளில் 77 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. தினமும் 3.15 டி.எம்.சி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசு மறுக்கிறது. இதைக் கண்டிக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச அக்கறை கூட இல்லாமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய உரிமைகளை தி.மு.க. அரசு எந்த அளவுக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது தான் வருந்தத்தக்க எடுத்துக்காட்டு ஆகும்.

    கர்நாடகத்தின் அநீதியை தமிழக அரசு இனியும் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை அடுத்த இரு நாட்களுக்குள் கூட்டி, தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்த வேண்டும். அதையும் கர்நாடகம் மதிக்காவிட்டால், தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க ஆணையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • அரிசி மூட்டை, மளிகை சாமான், வேட்டி சேலை, மது, பிரியாணி வழங்கப்பட்டது.
    • அடக்குமுறைகளை மீறி பாமக வேட்பாளர் 56 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.

    பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது,

    * முதல்வர் தவிர மீதமுள்ள 33 அமைச்சர்களும், 125 எம்.எல்.ஏக்களும் விக்ரவாண்டியில முகாமிட்டிருந்து பணத்தை வெள்ளமாக பாயவிட்டனர்.

    * தினமும் டோக்கன் வழங்கி ரூ. 300 முதல் ரூ. 500 வரை பணம் வாரி இறைக்கப்பட்டது.

    * அரிசி மூட்டை, மளிகை சாமான், வேட்டி சேலை, மது, பிரியாணி வழங்கப்பட்டது.

    * ஒரு வாக்குக்கு ரூ. 10000 வரை திமுக வழங்கியுள்ளது. திமுகவின் ரூ. 250 கோடிக்கு கிடைத்த வெற்றி.

    * அடக்குமுறைகளை மீறி பாமக வேட்பாளர் 56 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.

    2024 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற 32ஆயிரம் வாக்குகளைவிட, தற்போது 75 சதவீதம் வாக்கு அதிகம் பெற்றுள்ளோம்.

    உண்மையான வெற்றி பாமகவுக்கு கிடைத்துள்ளது. பாமகவுக்காக பிரசாரம் மேற்கொண்ட கூட்டணி கட்சி தலைவர்கள், அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவின் வெற்றி தற்காலிகமானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    ×