search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramadoss"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக வேண்டும். அதுவே இந்திய நாட்டுக்கு நன்மை பயக்கும்.
    • அனைவரும் சமத்துவம், சகோதரத்துவத்துடன் வாழ தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் .

    திண்டிவனம்:

    திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீமரகதாம்பிகை அரசு உதவி பெறும் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காலை 8 மணிக்கு தனது வாக்கைப்பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக வேண்டும். அதுவே இந்திய நாட்டுக்கு நன்மை பயக்கும். அனைவரும் சமத்துவம், சகோதரத்துவத்துடன் வாழ தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் .

    பேட்டியின் போது மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார், பா.ம.க. விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜெயராஜ், முன்னாள் நகர செயலர் சண்முகம், வக்கீல் பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் விளையவில்லை.
    • தி.மு.க. அரசின் சாதனை என்று சொல்லிக் கொள்வதற்கு ஒன்று கூட இல்லை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான் மத்தியில் மீண்டும் அமைய வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பம் ஆகும். இந்தியா முழுவதும் வீசும் அதே மோடி ஆதரவு அலை தான் தமிழ்நாட்டிலும் வீசுகிறது. தமிழகத்தின் பெரும் பான்மையான பகுதிகளுக்கு பரப்புரை சென்று வந்ததன் மூலம் மோடி ஆதரவு அலையை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் 90 விழுக்காடு தமிழ்நாட்டு மக்கள் தங்களின் வாக்கு யாருக்கு? என்பதை முடிவு செய்து விட்டார்கள்.

    கடந்த பத்தாண்டுகளில் 2014-ம் ஆண்டில் தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த 37 உறுப்பினர்களும், 2019-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அணியைச் சேர்ந்த 38 உறுப்பினர்களும் சமூக நீதிக்காகவோ, தமிழக நலன்களுக்காகவோ குரல் கொடுக்கவில்லை.

    பா.ம.க. போட்டியிடும் 10 இடங்களிலும் வெற்றி பெற்றால் தான் தமிழகத்தின் குரல் பாராளுமன்றத்தில் வலிமையாக ஒலிக்கும்; உரிமைகள் கிடைக்கும்.


    மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் விளையவில்லை. மாறாக, மின்கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, மோட்டார் வாகன வரி உயர்வு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, 10 முறை பால் விலை உயர்வு ஆகியவை தான் வாக்களித்த மக்களுக்கு தி.மு.க. அரசு அளித்த பரிசு ஆகும். தி.மு.க. அரசின் சாதனை என்று சொல்லிக் கொள்வதற்கு ஒன்று கூட இல்லை. வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்பதில் இருந்தே மக்களை தி.மு.க. அரசு மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது. மக்களை மதிக்காத தி.மு.க.வுக்கு மக்கள் அளிக்க வேண்டிய சரியான தண்டனை தோல்வி தான். அதை தி.மு.க.வுக்கு நீங்கள் அளிக்க வேண்டும்.

    தமிழக வாக்காளர்களுக்கு ஒரே தேர்தலில் இரு இலக்குகளை சாதிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மத்தியில் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான நல்லாட்சியை மீண்டும் ஏற்படுத்துவது, தமிழ் நாட்டில் மக்களை வாட்டும் தி.மு.க. அரசை தண்டிப்பது ஆகியவை தான் அந்த இரு இலக்குகள். இந்த இலக்குகளை சாதிக்க நாளை மறுநாள் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பா.ம.க., பாஜக மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளுக்கு மாம்பழம், தாமரை, சைக்கிள், குக்கர், பலாப்பழம் ஆகிய சின்னங்களில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்; அதன்மூலம் தமிழ்நாட்டை தீமைகளில் இருந்து மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் உரிமைகளைவென்றெடுக்கவும் வகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைக் கைப்பற்றப் போவதும் சுவர் மீது எழுத்தாகிவிட்டது.
    • பயிரை சாகுபடி செய்யும் காலத்தை விட அறுவடை செய்யும் காலத்தில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சற்றேறக் குறைய ஒரு மாதத்திற்கு முன் தொடங்கிய மக்களவைத் தேர்தல் திருவிழா, இப்போது அதன் நிறைவுகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 19-ம் நாள் வாக்குப்பதிவு நாள். ஆம்.... தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கப்படுவதற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன. வியப்பைத் தரும் உன் உழைப்பு தான் எனக்கு மகிழ்ச்சியையும் அளிக்கிறது; பெரும் நம்பிக்கையையும் தருகிறது. உனது உழைப்பு தான் தமிழ்நாட்டில் நடைபெறும் மக்களவைத் தேர்தல்களில் நமக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித்தரப் போகிறது. தேசிய அளவில் நரேந்திர மோடி தான் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கவிருக்கிறார் என்பது எப்போதோ உறுதியாகி விட்டது. தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைக் கைப்பற்றப் போவதும் சுவர் மீது எழுத்தாகிவிட்டது.

    இதற்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு என்ன? பாட்டாளி மக்கள் கட்சியின் பங்களிப்பு என்ன? என்பது தான் விடை காணப்பட வேண்டிய வினா ஆகும். என்னைப் பொறுத்தவரை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் களமிறங்கியுள்ள 10 பேர் உட்பட தமிழ்நாடு மற்றும் புதுவையிலிருந்து 40 பேரும் மக்களவைக்கு செல்ல வேண்டும்; நமது மாநிலங்களின் உரிமைகளுக்காகவும், தேவைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமும், எதிர்பார்ப்பும். அதை நீ நிறைவேற்றுவாய் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.

    பயிரை சாகுபடி செய்யும் காலத்தை விட அறுவடை செய்யும் காலத்தில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதன்படி அடுத்த 4 நாட்களுக்கு பாட்டாளி இளஞ்சிங்கங்களாகிய நீங்கள் மிகவும் விழிப்புடனும், கடமை உணர்வுடனும் தேர்தல் பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடி வாரியாக அமைக்கப்பட்டுள்ள குழுக்களைச் சேர்ந்தவர்கள் அடுத்து வரும் நாட்களில் ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தது 10 முறையாவது சந்தித்து அந்தந்த மக்களவை தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டும். வெற்றியை நமக்கு உரித்தாக்க வேண்டும்

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தமிழ்நாட்டில் நாம் ஆண்ட கட்சியும் இல்லை... ஆளும் கட்சியும் இல்லை.
    • ஏப்ரல் 19 உன் உழைப்பை எடைபோடும் நாளாகவும், ஜூன் 4 சிங்கக்குட்டிகளின் உழைப்பின் பயனைக் கொண்டாடும் நாளாகவும் அமைய வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தல் ஓடோடி வந்துவிட்டது. அடுத்த வாரம் இதே நாள், இதே நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில மக்கள் இந்தியத் தேசத்தின் எதிர் காலத்தைத் தங்களின் விரல் நுனிகளால் எழுதிக் கொண்டிருப்பார்கள்.

    தமிழ்நாட்டில் நாம் ஆண்ட கட்சியும் இல்லை... ஆளும் கட்சியும் இல்லை. அதனால் நம்மிடம் கோடிகளும் இல்லை. நம்மிடம் இருப்பவை அனைத்தும் கொடிகளும், கொள்கைகளும் தான். இவற்றை வைத்துக் கொண்டு இவர்களால் என்ன செய்து விட முடியும்? என்ற ஏளனப் பார்வையுடன் தான் தமிழகத்தின் இரு கூட்டணிகளும் தேர்தல் களத்தில் நுழைந்தன. ஆனால், சிங்கத்தின் குகையில் சிறு நரிகளால் என்ன செய்து விட முடியும்? என்பதைப் போல நமது உழைப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் அக்கட்சிகள் தொலைதூரத்துக்குப் பின்னால் துவண்டு கிடக்கின்றன. நீயோ வெற்றிக் கோட்டை நெருங்கி விட்டாய்.

    2019-ம் ஆண்டில் திமுக கூட்டணி சார்பில் 38 பேர் வெற்றி பெற்று டெல்லிக்கு சென்றனர். ஆனால், அவர்கள் ஆறாவது விரலாகத் தான் இருந்தனர். அவர்களால் அவர்களைத் தேர்வு செய்த தொகுதிகளின் மக்களுக்கோ, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கோ எந்தவித பயனும் ஏற்படவில்லை.

    பாட்டாளி மக்கள் கட்சி காலத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட பல தொடர்வண்டித் திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப் படாமலேயே கிடக்கின்றன. கால ஓட்டத்தில் தமிழகத்திற்கான தேவைகள் அதிகரித்திருக்கின்றன. அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றால், தமிழகத்தின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கக் கூடிய, செயல் படக்கூடிய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அதற்கு பா.ம.க. 10 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் வெற்றிக்கனியை பரிசாக வழங்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகவே உள்ளனர். அதே நேரத்தில் அந்தக் கனியை பறிக்க நமது உழைப்பும் மிகவும் அவசியம். இதை நான் உனக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து களத்தில் எப்படி உழைக்கிறாயோ, அதே உழைப்பை இன்னும் ஒரு வாரத்திற்கு கொடு. வெற்றி நம் வசமாகிவிடும். ஏப்ரல் 19 உன் உழைப்பை எடைபோடும் நாளாகவும், ஜூன் 4 சிங்கக்குட்டிகளின் உழைப்பின் பயனைக் கொண்டாடும் நாளாகவும் அமைய வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒட்டுமொத்தமாக 15 மாதங்களாகியும் ஆணையம் எதையும் செய்யவில்லை; ஆணையம் கேட்ட தரவுகளையே தமிழக அரசு தரவில்லை.
    • வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த 31.3.2022 அன்று சுப்ரீம் போர்ட்டில் தீர்ப்பளித்த நிலையில், தமிழக அரசு நினைத்திருந்தால் அடுத்த இரு வாரங்களில் இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். ஆனால், அதன்பின் 9 மாதங்கள் கழித்து நவம்பர் 17-ந்தேதி தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்பின் இரு மாதங்கள் கழித்து 12.1.2023-ந்தேதி வன்னியர் உள் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    இதன்படி கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ந்தேதி பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால், அதன்பின் இரு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது; நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவும் இன்றுடன் நிறைவடைந்து விட்டது. ஒட்டுமொத்தமாக 15 மாதங்களாகியும் ஆணையம் எதையும் செய்யவில்லை; ஆணையம் கேட்ட தரவுகளையே தமிழக அரசு தரவில்லை.

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையைக் கடந்து போராடித்தான் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டும் என்றால் அதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி தயாராகத்தான் இருக்கிறது. இதை உணர்ந்து வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சமூகநீதிதான் எங்களது லட்சியம். அதற்காக எந்த கூட்டணியில் இருந்தாலும் போராடுவோம்.
    • அ.தி.மு.க.தான் எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அளித்துள்ள ஒரு பேட்டியில் தி.மு.க.-அ.தி.மு.க. இரு கட்சிகளையும் கடுமையாக தாக்கி உள்ளார். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டணி அமைத்து இருப்பதாகவும் அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கேள்வி:- கூட்டணி அமைப்பது தொடர்பாக உங்களுக்கும், உங்களது தந்தைக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதே?

    பதில்:- அது அ.தி.மு.க. உருவாக்கிய புரளி. நானும், எனது தந்தையும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பதை எப்போதோ தீர்மானித்து விட்டோம். அ.தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவே இல்லை.

    எனது தந்தையை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசிய பிறகுதான் இந்த புரளி கிளம்பியது.

    கேள்வி:- பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க என்ன காரணம்?

    பதில்:- 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாத புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. தி.மு.க.வுடனும், அ.தி.மு.க.வுடனும் கூட்டணி அமைத்து பட்டதுபோதும். இதை கருத்தில் கொண்டுதான் பாரதிய ஜனதா கட்சியுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.

    கேள்வி:- அடிக்கடி கூட்டணி மாறுவதால் உங்கள் கட்சி மீது குற்றச்சாட்டுகள் எழுப்பபடுமே?

    பதில்:- எந்த கூட்டணி என்றாலும் பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக பாடுபட்டு உள்ளது. இதை எந்த கட்சியும் மறுக்க இயலாது. நாங்களாக ஒருபோதும் கூட்டணியை மாற்றிக் கொள்வது இல்லை. உண்மையில் தி.மு.க., அ.தி.மு.க.வால்தான் நாங்கள் கூட்டணியில் மாற வேண்டிய நிலை ஏற்பட்டது.

    தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க.தான் எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றுள்ளது. எங்களது கூட்டணி நிச்சயம் அதிகாரத்துக்கு வரும்.

    கேள்வி:- மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக உள்ளது. அது உங்கள் கொள்கைக்கு மாறுபட்டதாக கருதப்படுகிறதே?

    பதில்:-சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருப்பதாக மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சிதான் சில மாநிலங்களில் ஆதாயத்துக்காக கணக்கெடுப்பு பற்றி பேசியது.

    தற்போதைய கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் தான் மூத்த தலைவர். அவர் பிரதமரிடம் பேசி சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி நல்ல தீர்வு காண்பார்.

    சமூகநீதிதான் எங்களது லட்சியம். அதற்காக எந்த கூட்டணியில் இருந்தாலும் போராடுவோம்.

    கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    பதில்:- எங்களது கூட்டணிக்கு முழுமையான வெற்றி கிடைக்கும். அது 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மாற்று அணி உருவெடுக்க வாய்ப்பை ஏற்படுத்தி தரும். அந்த தேர்தலின் போது நாங்கள் மிக பிரமாண்டமான அணியை உருவாக்குவோம்.

    2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை திட்டவட்டமாக இப்போதே என்னால் சொல்ல முடியும்.

    கேள்வி:- பா.ம.க. உங்களை முன் நிறுத்தினாலும் தமிழகம் முழுக்க ஆதரவு கிடைக்குமா?

    பதில்:- வன்னியர் சங்கம் அடிப்படையில்தான் பா.ம.க. உருவானது. ஆனால் நாளடைவில் அதில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு தலித்தான் பொதுச் செயலாளராக இருக்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டது.

    இப்போது பா.ம.க. மீதான மக்கள் எண்ணம் மாறி வருகிறது. தமிழக மக்கள் அன்புமணியை ஒரு வன்னியர் தலைவராக மட்டும் பார்ப்பது கிடையாது. படித்தவர், டாக்டர், நாட்டுக்கு நல்லது செய்பவர் என்ற கோணத்தில்தான் பார்க்கிறார்கள்.

    கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்பட்சத்தில் மேல்சபை எம்.பி.யாக இருக்கும் நீங்கள் மத்திய மந்திரியாக வாய்ப்பு உள்ளதா?

    பதில்:- இல்லை. பா.ஜ.க. தலைவர்களுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசிய போது மத்திய மந்திரி பதவி பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை. அது அவர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. நான் மாநில அரசியலில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன்.

    எனது மனைவி சவுமியா தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். அவர் மிக சிறந்த எம்.பி.யாக திகழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நமது கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 இடங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.
    • இனிவரும் நாட்களில் கடுமையாக உழைத்து வெற்றிகளை சாத்தியமாக்குங்கள்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றிகளைக் குவிப்பதற்காக களத்தில் நீ கொடுக்கும் உழைப்பையும், நீ காட்டும் உறுதியையும் நினைத்து மனம் நெகிழ்ந்து போய், உன்னை மேலும் ஊக்கப்படுத்துவதற்காகத் தான் இந்த மடலை நான் வரைகிறேன்.

    பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை கண்ட மக்களவைத் தேர்தல்களில் இருந்து இந்தத் தேர்தல் முற்றிலும் மாறானது. தமிழ்நாட்டின் தலையெழுத்தை நாங்கள் தான் நிர்ணயிப்போம் என்று மார்தட்டி வந்த அ.தி.மு.க.வையும், திமுகவையும் ஒதுக்கி வைத்து விட்டு, புதிய அணியை அமைத்து, புதிய பயணத்தை நாம் தொடங்கியிருக்கிறோம்.

    இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று நான் கூறுவதற்கு பதவிகளை பிடிக்க வேண்டும் என்ற ஆசை காரணமல்ல. மாறாக, தடைப்பட்டுக் கிடக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்ற வேட்கை தான் காரணம் ஆகும்.


    தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையில் தான் போட்டி என்று இரு கட்சிகளும் மூச்சுக்கு முந்நூறு முறை கூறிக்கொள்கின்றன. ஆனால், அவர்களின் அடிமனதில் பா.ம.க. மற்றும் பாரதிய ஜனதா கூட்டணியைக் கண்டு பெரும் அச்சம் நிலவுகிறது. அவர்களின் அச்சத்தை நிரந்தரமாக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடும் 10 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்; நமது கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 இடங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இதுவே நமது இலக்கு.

    அந்த இலக்கை அடைவதற்காக இப்போது கடுமையாக உழைக்கும் பாட்டாளி இளஞ்சிங்கங்கள் அனைவரும் இனி இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். நமது வேட்பாளர்களாலும், கூட்டணியின் வேட்பாளர்களாலும் அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக்கும் செல்வது சாத்தியமல்ல. நீங்கள் தான் காடுகளையும், மேடுகளையும், ஆறுகளையும், மலைகளையும் கடந்து சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும்.

    அந்த ஆதரவின் உதவியுடன் 40 இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது என்ற செய்தி தேனாக நம் செவிகளில் பாய வேண்டும். அதற்காக இனிவரும் நாட்களில் கடுமையாக உழைத்து வெற்றிகளை சாத்தியமாக்குங்கள். அது தான் எனது 45 ஆண்டுகால பொதுவாழ்க்கைப் பணிகளுக்கு நீங்கள் அளிக்கும் அங்கீகாரமாக அமையும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதை கலைஞர் எதிர்க்காமல் இருந்ததற்கு காரணங்கள் உள்ளன.
    • இந்த சிக்கலில் தி.மு.க. மற்றும் காங்கிரசின் நிலைப்பாடுகள் முரண்பாடுகளின் மூட்டையாகவே உள்ளது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்தது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இதை ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நடத்த நிகழ்வாக கடந்து சென்று விட முடியாது. கச்சத்தீவு அன்று தாரை வார்க்கப்பட்டதன் விளைவுகளை இன்று வரை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த 800-க்கும் கூடுதலான மீனவர்கள் இலங்கைப் படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், 6184 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கும், 1175 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டதற்கும் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது தான் காரணம். அதற்கு காரணமானவர்களை எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாது.

    கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதை அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி, தெரிந்தே அனுமதித்தார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும் முடிவை இந்திரா தலைமையிலான மத்திய அரசு எடுத்தபோது கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் தான் கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் 1974-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ந்தேதி இலங்கையிலும், 28-ந்தேதி டெல்லியிலும் கையெழுத்திடப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி இதைத்தடுக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    ஆனால், இந்த முடிவை திமுக எதிர்ப்பதாக காட்டிக் கொள்வதற்காக, கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கு அடுத்த நாள் 29.6.1974 அன்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி பெயருக்கு ஒரு தீர்மானம் நிறைவேற்றினார். அதன்பின் 21.8.1974 அன்று தமிழக சட்டசபையில் கச்சத்தீவு தொடர்பாக மத்திய அரசுக்கு வலிக்காமல் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதை கலைஞர் எதிர்க்காமல் இருந்ததற்கு காரணங்கள் உள்ளன. அப்போதைய கலைஞர் அரசு மீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டன. எம்.ஜி.ஆரும், இடதுசாரிகளும் கலைஞருக்கு எதிராக ஊழல் புகார்களை மத்திய அரசிடம் அளித்து அதனடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதனால் கருணாநிதி அரசை எந்த நேரமும் கலைத்து விட்டு ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்துவோம் என மத்திய அரசு மிரட்டி வந்தது. அதற்கு பயந்து தான் கருணாநிதி மவுனமாக இருந்து விட்டார் என்று அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவற்றை இப்போதும் மறுக்க முடியாது.

    இலங்கைக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதை காங்கிரஸ் கட்சி இப்போதும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. அது நல்லுணர்வுடன் கூடிய பரிமாற்றம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுகிறார். ஆனால், கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதை எதிர்ப்பதாக இப்போதும் தி.மு.க. கூறுகிறது. இந்த சிக்கலில் தி.மு.க. மற்றும் காங்கிரசின் நிலைப்பாடுகள் முரண்பாடுகளின் மூட்டையாகவே உள்ளது.

    நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டது, கல்வி உள்ளிட்ட மாநில அரசுப் பட்டியலில் இருந்த அதிகாரங்கள் காங்கிரஸ் அரசால் பொதுப்பட்டிய லுக்கு மாற்றப்பட்டது, 1½ லட்சம் அப்பாவித் தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டது என பல விவகாரங்களில் தி.மு.க.-காங்கிரசின் நிலைப்பாடுகள் முரண்பாடுகளின் உச்சமாகவே உள்ளன. ஆனாலும், கூடா நட்பு கேடாய் முடியும் என்று விமர்சிக்கப்பட்ட காங்கிரசுடன் தி.மு.க. இப்போதும் கூட்டணி வைத்திருப்பதன் மர்மம் என்ன? மு.க. ஸ்டாலின் விளக்குவாரா?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமூகநீதி குறித்தெல்லாம் பேசுவதற்கு தமக்கு தகுதி இருக்கிறதா? என்று மு.க.ஸ்டாலின் தனக்குத் தானே வினா எழுப்பி விடை காண வேண்டும்.
    • வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சமூகநீதி குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திரமோடி ஏற்றுக்கொள்வாரா? அதற்கான உத்தரவாதத்தை நரேந்திர மோடியிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சி பெற்றிருக்கிறதா? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வினா எழுப்பியிருக்கிறார்.

    2004-ம் ஆண்டில் சமூகநீதிக் கொள்கையில் பாட்டாளி மக்கள் கட்சி எந்த அளவு உறுதியுடன் இருந்ததோ, அதே உறுதியுடன் தான் இப்போதும் உள்ளது. பாராளுமன்றத்தில் அப்போதிருந்த அளவுக்கு வலிமையை இப்போதும் பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. கொள்கை வலிமையையும், அதிகார வலிமையையும் பயன்படுத்தி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசை ஒப்புக்கொள்ளச் செய்ய பா.ம.க.வால் முடியும்.

    பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக நீதிபதி ரோகிணி ஆணையத்தை அமைத்து, அதன் அறிக்கையை பெற்ற பிரதமர் நரேந்திர மோடி இக்கோரிக்கையையும் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.

    இது ஒருபுறம் இருக்க, சமூகநீதி குறித்தெல்லாம் பேசுவதற்கு தமக்கு தகுதி இருக்கிறதா? என்று மு.க.ஸ்டாலின் தனக்குத் தானே வினா எழுப்பி விடை காண வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக அளித்த உத்தரவாதத்தை இரு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றினோமா? என்பதை நேர்மையுடனும், மனசாட்சியுடனும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    மு.க.ஸ்டாலின் நினைத்திருந்தால் வன்னியர்களுக்கு எப்போதோ இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், பிற சமூகங்களின் கோரிக்கைகளைக் கேட்டுக் கேட்டு நிறைவேற்றும் மு.க. ஸ்டாலினுக்கு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மட்டும் மனம் வரவில்லை. ஆனால், மேடைகளில் மட்டும் சமூகநீதியில் அக்கறைக் கொண்டவர் போல நடிக்கிறார். மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி விட்டு, தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி விட்டு, அதன்பிறகு சமூகநீதி பற்றி பேச வேண்டும்.

    ஒருவரை ஒரு முறை ஏமாற்றலாம்... சிலரை சில முறை ஏமாற்றலாம். ஆனால், வன்னியர்களை ஒவ்வொரு முறையும் ஏமாற்ற முடியாது. வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர். அதை தி.மு.க. விரைவில் உணரும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக ஆறுகள் சீரமைக்கப்படும்.
    • தங்கம் இறக்குமதி வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ம.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் வருமாறு:-

    * சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்.

    * தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீத பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வரப்படும்.

    * மாநிலங்களுக்கு தன்னாட்சி குறித்து பரிந்துரைக்க வலியுறுத்தப்படும்.

    * மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவீதம் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    * வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்கப்படுவது உழவர்களின் உரிமையாக்கப்படும்.

    * 60 வயது கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்.

    * பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட ரூ.1 லட்சம் வரையிலான பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

    * நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்கப்படும்.

    * கடலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட 3 நிலக்கரி திட்டங்கள் கைவிடப்படும்.

    * மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி மற்றும் உணவு தானியங்களுக்கு தடை விதிக்கப்படும்.

    * குறிப்பிட்ட காலத்துக்குள் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தமிழகத்தில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    * தமிழ்நாட்டை அணு உலை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    * கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

    * மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை திரும்ப பெறப்படும்.

    * தமிழக ஆறுகள் சீரமைக்கப்படும்.

    * தமிழகத்தில் 3 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    * பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

    * கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு கால மருத்துவ உதவி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    * மூத்த குடிமக்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    * பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற தேவைகளுக்கு ரூ.10 லட்சம் வைப்பீடு கொடுக்கப்படும்.

    * அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வலியுறுத்தப்படும்.

    * அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * சென்னையில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கப்படும்.

    * அனைத்து வட்ட தலைநகரங்களிலும் அறுவை சிகிச்சை வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனைகள் தொடங்கப்படும்.

    * சென்னையில் ரூ. ஆயிரம் கோடியில் தேசிய புற்றுநோய் மருத்துவ மையம் அமைக்கப்படும்.

    * நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * போதைப் பொருட்களை ஒழிக்க சட்டத்திருத்தம் செய்யப்படும்.

    * மது விலக்கை நடை முறைப்படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * புகையிலை பொருட்கள் மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படும்.

    * தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 7 லட்சமாக உயர்த்த வலியுறுத்தப்படும்.

    * ஜி.எஸ்.டி. வரி 2 அடுக்குகளாக குறைக்கப்படும்.

    * பெட்ரோல்-டீசல் மீதான வரி குறைக்கப்படும்.

    * தங்கம் இறக்குமதி வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படும். இதனால் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 6 ஆயிரம் வரை குறையும்.

    * தொழில் தொடங்க மாணவர்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்கப்படும்.

    * தருமபுரி-மொரப்பூர் இடையே புதிய ரெயில் பாதை அமைக்கும் பணியை ஒரு ஆண்டில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    * தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

    * தமிழை தேசிய அலுவல் மொழியாக்க வலியுறுத்தப்படும்.

    * திருக்குறளை தேசிய நூலாக்க வலியுறுத்தப்படும்.

    * மது விலக்கு சட்டம் இயற்ற வலியுறுத்தப்படும்.

    * பாட திட்டங்களில் விளையாட்டு சேர்க்கப்படும்.

    * இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தப்படும்.

    * புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வலியுறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பு வரை தேர்தலில் போட்டியிட நமச்சிவாயம் தயக்கம் காட்டி வந்தார்.
    • கடந்த 2 நாட்களாக அமைச்சர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை வீடு தேடிச்சென்று சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார்.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.

    வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பு வரை தேர்தலில் போட்டியிட அமைச்சர் நமச்சிவாயம் தயக்கம் காட்டி வந்தார். பா.ஜனதா மேலிடத்தின் உத்தரவை ஏற்று வேட்பாளராக களம் இறங்கியவுடன் தேர்தல் பணிகளில் அசுர வேகம் காட்டி வருகிறார்.

    கடந்த 2 நாட்களாக புதுச்சேரி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தொகுதி பிரமுகர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை வீடு தேடிச்சென்று சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார்.

    சென்னைக்கு சென்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தார்.


    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசையும் சந்தித்து நலம் விசாரித்து, ஆசி பெற்றார். தொடர்ந்து தனக்காக புதுச்சேரிக்கு வந்து பிரசாரம் செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாசிடம் கேட்டுக் கொண்டார்.

    அதற்கு ராமதாஸ் பதிலளிக்காவிட்டாலும், கடலூர், விழுப்புரம் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இதனால் புதுச்சேரியிலும் அவர் பிரசாரம் செய்ய வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேநேரத்தில் புதுவை மாநில பா.ம.க. தலைவர் கணபதியிடம், நமச்சிவாயத்தை வெற்றி பெறச் செய்து எம்.பி.யாக பாராளுமன்றத்துக்கு அனுப்ப தீவிரமாக பணியாற்றும்படி உத்தரவிட்டுள்ளார்.

    • கூட்டணி கட்சிகளின் கொள்கை வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதே.
    • பல கட்சிகள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பிரமாண்ட மேடைகள் அமைத்து பிரசாரம் மேற்கொள்வார்கள்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோவடி கிராமத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கோவடி கிராமம் என்னுடைய தாய் கிராமம். நான் சிறுவனாக இருந்தபோது இந்த ஊர் வழியாக தான் திண்டிவனம் செல்வேன். இந்த கிராமத்திற்கு நான் ஒவ்வொரு முறை வரும்போதும் மக்கள் என்னை ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள்.

    ஆகவே நான் எனது தாய் கிராமமான கோவடியில் இருந்து பாராளுமன்ற தேர்தல் பரப்புரையை முதல்முறையாக தொடங்கியுள்ளேன். இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். ஜவஹர்லால் நேரு 3 முறை பிரதமராக இருந்துள்ளார். அவரது மகள் இந்திராகாந்தியும் 3 முறை பிரதமராக இருந்துள்ளார். தற்போது நரேந்திர மோடி 2 முறை பிரதமராக இருந்துள்ளார். மீண்டும் மோடி 3-வது முறையாக பிரதமராக போகிறார்.


    தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி சார்பில் 10 தொகுதிகளில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும். இந்த கூட்டணி கட்சிகளின் கொள்கை வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதே. குடிசையிலே வாழ்கின்ற மக்கள் நமது மாவட்டத்தில் தான் உள்ளார்கள். விவசாயிகளுக்காக கடந்து 32 ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வைத்து விவசாயிகளுக்கு என்று தனி பட்ஜெட்டை அறிவித்து வருகிறோம். மேலும் நாட்டில் குடிப்பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும். அவரிடம் பல்வேறு திட்டங்களை பெறுவதுடன், அதில் முதல் திட்டமாக கோதாவரி கங்கை ஆகியவற்றை இணைக்கும் திட்டத்தை பெற்று அதனை செயல்படுத்த வேண்டும்.

    மேலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வாக்காளர்களாகிய நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். பல கட்சிகள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பிரமாண்ட மேடைகள் அமைத்து பிரசாரம் மேற்கொள்வார்கள். ஆனால் நான் அவையெல்லாம் இல்லாமல் என்னுடைய மக்களுடன் அமர்ந்து உரிமையோடு வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற நோக்கிலே இங்கு வந்து உங்களிடம் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டுள்ளேன். வெற்றி தோல்வியை தீர்மானிப்பது பெண்கள்.

    எனவே பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது கிராமத்தில் மட்டுமில்லாமல் தங்களது அருகே உள்ள கிராமங்களுக்கும் சென்று, அங்குள்ள பெண்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். முக்கனிகளில் முதல் கனி மாம்பழம். அதற்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

    ×