செய்திகள்
பெரம்பலூரில் சேதமடைந்த வடிகால் வாய்க்கால் பாலத்தை சீரமைக்க கோரிக்கை
பெரம்பலூரில் சேதமடைந்த வடிகால் வாய்க்கால் பாலத்தில் புதிதாக கான்கிரீட் அமைத்து பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு பகுதியில் மேரிபுரத்தில் இருந்து பாரதிதாசன் நகருக்கு செல்லும் பிரதான சாலையில் காவேரிநகர் திரும்பும் வழியில் மழைநீர் வடிகால் வாய்க்காலின் மேல் அமைக்கப்பட்டுள்ள சிறிய கான்கிரீட் பாலம் உடைந்து சேதமடைந்துள்ளது.
பாலம் சேதமடைந்து சில மாதங்கள் கடந்த நிலையிலும், சீர் செய்யப்படாமல் உள்ளது. இதனால் மேரிபுரத்தில் இருந்து காவேரி நகருக்கு வாகனங்களில் சென்று வருபவர்கள், காவேரி நகரில் குடியிருக்கும் பொதுமக்கள் அந்த வழியாக செல்லும்போது அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் இந்த பாதையை பயன்படுத்த முடியாமல் காவேரி நகரின் மற்றொரு தெரு வழியாக அவர்கள் செல்லும் நிலை உள்ளது. எனவே அப்பகுதி மக்கள் வாகனங்களில் சென்று வர வசதியாக நகராட்சி நிர்வாகம், அந்த பாலத்தில் புதிதாக கான்கிரீட் அமைத்து பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.