வீரவநல்லூரில் தொழில் அதிபர் மர்ம மரணம்
நெல்லை:
திருப்பூர் அருகே உள்ள குளத்துபுதூர் பகுதியை சேர்ந்தவர் அரசகுமார் (வயது 48). இவரும், இவரது நண்பர் ஒருவரும் சேர்ந்து திருப்பூரில் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிறுவனத்துக்கு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்காக அரசகுமாரும், அவரது நண்பர் கவுதம் (32) என்பவரும் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் வந்தனர்.
வீரவநல்லூரில் உள்ள அவர்களது நண்பர் ராம் குமார் வீட்டில் தங்கியிருந்து, கம்பெனிக்கு ஆட்கள் தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் அனைவரும் ராம்குமார் வீட்டில் தங்கியிருந்து மது குடித்துள்ளனர். போதையில் அனைவரும் நன்றாக தூங்கி விட்டு நேற்று காலை எழுந்து பார்த்தனர். அப்போது அரசகுமார் வாந்தி எடுத்த நிலையில் பிணமாக கிடந்தார்.
அவர் எப்படி இறந்தார் என்று அவரது நண்பர்கள் யாருக்கும் தெரியவில்லை. இதுகுறித்து கவுதம் வீரவ நல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட விசாரணையை போலீசார் நடத்த உள்ளனர்.