செய்திகள்
கத்திக்குத்து

திருத்துறைப்பூண்டி அருகே முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து- 2 பேருக்கு வலைவீச்சு

Published On 2020-11-09 09:48 GMT   |   Update On 2020-11-09 09:48 GMT
திருத்துறைப்பூண்டி அருகே முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ராயநல்லூர் நாட்டு வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் ரஜினி மகன் பிரகதீஸ்வரன் (வயது21). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜா மகன் தர்மராஜ் (20), கண்ணன் மகன் கலைமகன்(21) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் முன்விரோதம் காரணமாக இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த தர்மராஜ், பிரகதீஸ்வரனை கத்தியால் குத்தியுள்ளார். மேலும் பிரதீஸ்வரனின் இருசக்கர வாகனத்தை கலைமகன் உடைத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த பிரகதீஸ்வரன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இது குறித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன், ஆலிவலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், கல்யாணசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தர்மராஜ், கலைமகன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News