செய்திகள்
திருப்பூர்-அவினாசி பகுதியில் பரவலாக மழை
திருப்பூர் மற்றும் அவினாசி பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
திருப்பூர்:
திருப்பூரில் நேற்று இரவு 7 மணி அளவில் தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. அதன் பிறகு 30 நிமிடம் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பூர் மாநகர பகுதி முழுவதும் மழை பெய்தது. ஊத்துக்குளி ரோடு ஒற்றைக்கண் பாலம் பகுதியில் அதிக மழை நீர் தேங்கியது. திடீர் மழை காரணமாக சாலையோர தள்ளுவண்டி வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காண முடிந்தது.
அவினாசி வட்டார பகுதியில் நேற்று காலை முதல் இரவு 7 மணி வரை வானத்தில் மேக மூட்டம் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு 7 மணியளவில் திடீரென தொடர் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அவினாசி, சூளை, பழங்கரை, ஆட்டையாம்பாளையம், கருவலூர், தெக்கலூர், வேலாயுதம்பாளையம், செம்பிப் நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை விட்டு, விட்டு, பரவலாகமழை பெய்தது. பலத்த இடி மின்னல் காரணமாக அவினாசியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அவினாசி நகரம் இருளில் மூழ்கியது.