செய்திகள்
கோப்பு படம்.

விளாத்திகுளம் அருகே கண்மாயில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

Published On 2020-11-07 09:18 GMT   |   Update On 2020-11-07 09:18 GMT
விளாத்திகுளம் அருகே உறவினர்களுடன் குளிக்கச்சென்ற கல்லூரி மாணவர் கண்மாயில் மூழ்கி பலியானார்.
விளாத்திகுளம்:

விளாத்திகுளத்தை அடுத்த நாகலாபுரம் அருகே உள்ள மாதராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி என்ற இருளப்பன் என்பவரது மகன் சதீஷ்குமார் (வயது 22). இவர், நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் மாதிரி உறுப்பு கல்லூரியில் ஆங்கில பாடப் பிரிவில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை சதீஷ்குமார், அவரது அண்ணன் முனியசாமி மற்றும் உறவினர் பெரியசாமி ஆகியோருடன் மாதராஜபுரம் கண்மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது சதீஷ்குமார் திடீரென ஆழமான பகுதிக்கு சென்று உள்ளார். இதனால் அவரால் திரும்பி வர முடியவில்லையாம். உடனே அவர் அபயக்குரல் எழுப்பியுள்ளார். பதறிப்போன உறவினர்கள் இருவரும் சதீஷ்குமாரை காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. இதனையடுத்து சதீஷ்குமார் கண்மாய் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

இதனைதொடர்ந்து பெரியசாமி ஊருக்குள் சென்று பொதுமக்களை அழைத்து வந்து சதீஷ்குமாரை கண்மாய் தண்ணீரில் இருந்து மீட்டனர். உடனடியாக அவரை நாகலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர், அவரது உடல் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News