செய்திகள்
கொலை

சொத்து தகராறில் சைக்கிள் கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை

Published On 2020-11-02 09:46 GMT   |   Update On 2020-11-02 09:46 GMT
நெல்லை மாவட்டம் பணகுடியில் சொத்து தகராறில் தந்தையை சரமாரி வெட்டிக்கொலை செய்த மகன்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் பணகுடி அண்ணாநகர் ரோடு ஆசாத் தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது 65). இவர் அப்பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி மல்லிகா. இவர்களுக்கு கென்னடி (40), ராஜா (36), சேகர் (32) ஆகிய 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜ் தனது பூர்வீக வீட்டை மூத்த மகன் கென்னடிக்கு எழுதி கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மற்ற மகன்களான ராஜா, சேகர் ஆகிய இருவரும் சேர்ந்து தங்களுக்கு சொத்தில் பங்கு தருமாறு கூறி, தந்தை காமராஜ், அண்ணன் கென்னடி ஆகியோரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தனர். 

நேற்று முன்தினம் இரவில் காமராஜ் தனது வீட்டில் மூத்த மகன் கென்னடியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜா, சேகர் ஆகிய 2 பேரும் தந்தை காமராஜ், அண்ணன் கென்னடி ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த ராஜா, சேகர் ஆகிய 2 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காமராஜை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற அண்ணன் கென்னடிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. 

இதில் காமராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த கென்னடி உயிருக்கு போராடியவாறு கிடந்தார். உடனே ராஜா, சேகர் ஆகிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ராஜா, சேகர் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News