புராணங்களில் உள்ளதை மறுப்பதிவு செய்துள்ளார்: திருமாவளவனை காங்கிரஸ் ஆதரிக்கிறது- கேஎஸ் அழகிரி பேட்டி
நாகர்கோவில்:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ்.அழகிரி , அகஸ்தீஸ்வரத்தில் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் நினைவிடத்தில் இன்று மலர் தூவிஅஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு 7.5 சதவீதம் மருத்துவ துறையில் இட ஒதுக்கீடு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. கவர்னர் சுணக்கம் காட்டுவதை ஏற்க முடியாது, அவர் காலச்சக்கரத்தை மாற்றி சுழற்றுகிறாரா? என தோன்றுகிறது. உடனடியாக மசோதாவில் கையெழுத்து இட வேண்டும். இதை சட்டமாக்க வேண்டும்.
நீட் தேர்வை நாங்கள் எதிர்க்கிறோம், மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்களும் எழுதும் வகையில் நீட் தேர்வு அமைய வேண்டும். படிப்பது ஒரு பாடத்திட்டம், தேர்வு எழுதுவது மற்றொறு பாடத்திட்டமாக இருப்பதை எதிர்க்கிறோம்.
12 ஆயிரம் ஆண்டு கால இந்நிய வரலாற்றை மாற்றுவதற்கு பா.ஜ.க. முயல்கிறது, இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே உள்ளனர். இதனை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது, இந்த குழுவை கலைக்க வேண்டும்.
திருமாவளவன் மீது வழக்கு போட எந்த வித முகாந்திரமும் இல்லை. புராணங்களில் உள்ளதை மறுப்பதிவு செய்துள்ளார். புராணங்களில் பெண்களை இழிவாக கூறியுள்ளனர்.
திருமாவளவன் இந்து மத்ததிற்கு எதிராக பேசவில்லை, மதத்தில் உள்ள தவறுகளை நாமே சுட்டிக்காட்டினால் தவறில்லை. திருமாவளவன் தவறாக எதுவும் கூறவில்லை. நாங்கள் திருமாவளவனை ஆதரிக்கிறோம்.
கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். இது எங்கள் தொகுதியாகும்.
குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து சென்றது அவருக்கு தான் பின்னடைவு.
இவ்வாறு அவர் கூறினார்.