செய்திகள்
மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் முடிவு காலதாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது - மு.க.ஸ்டாலின்

Published On 2020-10-16 09:25 GMT   |   Update On 2020-10-16 09:25 GMT
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழக அரசின் முடிவு தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதிக்கின்ற உயர் சிறப்புத் தகுதி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையில்லை என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடும் எதிர்ப்பு, தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணியின் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் எழுச்சிமிகு போராட்டம் ஆகியவற்றிற்குப் பிறகு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை எனத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். இது காலதாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது.

அமைச்சர் இப்படிப் பேட்டி கொடுப்பதைவிட தமிழக அரசின் இந்த முடிவினை உடனடியாக மத்திய அரசுக்குக் கடிதம் வாயிலாக வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அரசின் கொள்கை முடிவில் தலையிட்டு தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்கிய, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்வதற்கு பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் தமிழக ஆளுநர் அவர்களுக்கு முதல்வர் பழனிசாமி உடனடியாகப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 
Tags:    

Similar News