செய்திகள்
உத்தரபிரதேச சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
உத்தரபிரதேச சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் ஆற்றலரசு தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழேந்தி, துணை செயலாளர் இரணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணை செயலாளர் வக்கீல் சேரலாதன், தொகுதி செயலாளர் தமிழ்மாறன், துணை செயலாளர் பெரியார், ஒன்றிய செயலாளர்கள் முகிலன், சங்கத்தமிழன், அறிவன், ஆசைத்தம்பி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் திண்டிவனம் காந்தியார் திடல் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சேரன் தலைமை தாங்கினார். திலீபன், தனஞ்செயன், பூபால், மயிலம் தொகுதி செயலாளர் செல்வ சீமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திண்டிவனம் நகர செயலாளர் இமயன் வரவேற்றார். இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் இளஞ்சேரன், காமராஜ், மலைச்சாமி, ஓவியர் பாலு, பேந்தர் பழனி, ஆறு, மரக்காணம் ஒன்றிய பொருளாளர் மயிலாவளவன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.