செய்திகள்
கைது

தஞ்சை அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம்: டிரைவர் கைது

Published On 2020-10-11 09:05 GMT   |   Update On 2020-10-11 09:05 GMT
தஞ்சை அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்த ஓசூரை சேர்ந்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கள்ளப்பெரம்பூர்:

தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயதான 10-ம் வகுப்பு மாணவி கடந்த ஆகஸ்ட் மாதம் தனது மதிப்பெண் சான்றிதழை வாங்க பள்ளிக்கு சென்றார். இதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாயமான பள்ளி மாணவி ஓசூரில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ஓசூருக்கு சென்றனர். ஓசூரில் ஒரு வீட்டில் தஞ்சையை சேர்ந்த மாணவி வாலிபர் ஒருவருடன் தங்கி இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் மாணவியை மீட்டு தஞ்சைக்கு அழைத்து வந்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் மாணவியுடன் தங்கி இருந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார்.

மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவிக்கும், ஓசூரை சேர்ந்த கார் டிரைவர் மணிராஜ் என்பவருக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதல் உருவானதும் இதனால் மாணவியை மணிராஜ் ஓசூருக்கு அழைத்து சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்தியதும் தெரியவந்தது. போலீசார் மணிராஜை தேடி வந்தனர். இந்தநிலையில் மணிராஜ் ஓசூரில் தனது நண்பர் வீட்டில் தங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வல்லம் அனைத்து மகளிர் போலீசார் ஓசூருக்கு சென்று மணிராஜை பிடித்து தஞ்சைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News