செய்திகள்
தஞ்சாவூரில் இருந்து குமரிக்கு சரக்கு ரெயில் மூலம் 1,600 டன் ரேஷன் அரிசி வந்தது
சரக்கு ரெயில் மூலம் தஞ்சாவூரில் இருந்து குமரி மாவட்டத்துக்கு 1,600 டன் ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பள்ளிவிளையில் மத்திய அரசுக்கு சொந்தமான உணவு கிடங்கு உள்ளது. இந்த உணவு கிடங்குக்கு மத்திய அரசு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து புழுங்கல் அரிசி, பச்சரிசி மற்றும் சீனி(சர்க்கரை) ஆகியவற்றை சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பி வைத்து வருகிறது.
இங்கு பாதுகாப்பாக வைக்கப்படும் உணவு பொருட்கள் தேவைக்கு ஏற்ப குமரி மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டு, மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்தநிலையில் சரக்கு ரெயில் மூலம் தஞ்சாவூரில் இருந்து குமரி மாவட்டத்துக்கு 1,600 டன் ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சரக்கு ரெயிலில் மொத்தம் 21 வேகன்களில் ரேஷன் அரிசி கொண்டு வரப்பட்டது.
பின்னர் அந்த வேகன்களில் இருந்து லாரிகளில் அரிசி மூடைகள் ஏற்றப்பட்டு, நாகர்கோவில் பள்ளிவிளையில் உள்ள மத்திய அரசின் உணவு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டது.