செய்திகள்
சேலத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.
சேலம்:
சேலத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது.
சேலத்தில் நேற்று மதியம் பலத்த வெயில் அடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் இரவு சுமார் 8.30 மணி அளவில் லேசான குளிர் காற்று வீசத்தொடங்கியது.
தொடர்ந்து சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இரவு 9.30 மணி வரை இந்த மழை நீடித்தது.
இதனால் சேலம் 4 ரோடு, கலெக்டர் அலுவலகம், புதிய பஸ் நிலையம், அஸ்தம்பட்டி, சத்திரம், குகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
ஒருசில தாழ்வான பகுதிகளில் மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து சென்றது. இரவில் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்துகொண்டே இருந்தது.