செய்திகள்
கோப்பு படம்.

சங்கரன்கோவிலில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி

Published On 2020-10-08 11:09 GMT   |   Update On 2020-10-08 11:09 GMT
சங்கரன்கோவிலில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே நெல்கட்டும்செவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகர் (வயது 36). கூலி தொழிலாளியான இவர், சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள தனது அக்காள் கனி செல்வியின் வீட்டில் வசித்து வந்தார். பின்னர் பிரபாகர் தனது மனைவியின் பிரசவத்துக்காக சொந்த ஊருக்கு சென்றார். 

இந்த நிலையில் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் சம்பவத்தன்று இரவில் அந்த வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். ஆனால் வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நேற்று முன்தினம் பிரபாகர் தனது அக்காளின் வீட்டுக்கு சென்றபோது, அங்கு கதவு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். 

இதுகுறித்த புகாரின்பேரில், சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News