செய்திகள்
பணம் திருட்டு

தூத்துக்குடியில் முதியவரிடம் ரூ.1½ லட்சம் பறிப்பு- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Published On 2020-10-06 10:35 GMT   |   Update On 2020-10-06 10:35 GMT
தூத்துக்குடியில் முதியவரிடம் ரூ.1½ லட்சத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி அண்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் அழகுராஜா (வயது 76). இவர் எப்போதும் வென்றான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது சோழபுரம் கிராமத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் நிர்வாகியாக உள்ளார்.

நேற்று மதியம் 1 மணியளவில் தூத்துக்குடி சிதம்பர நகரில் உள்ள ஒரு வங்கியில், கோவில் வங்கிக் கணக்கில் இருந்து நிர்வாக செலவுக்காக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்து உள்ளார். பின்னர் தனது சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார். அவர் அண்ணாநகர் வி.வி.டி. மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி அருகே வந்த போது, அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அழகுராஜாவை வழிமறித்து உள்ளனர்.

பின்னர் அவர் சைக்கிளில் தொங்கவிட்டு இருந்த பையில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்களாம். இதனால் பதற்றம் அடைந்த அழகுராஜா, இதுபற்றி தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நியைத்துக்கு சென்று புகார் தெரிவித்து உள்ளார். உடனடியாக தென்பாகம் மற்றும் மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நடந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News