செய்திகள்
திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் வானத்தில் கருமேகம் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு 8 மணிவரை பரவலாக ஆங்காங்கே மழை பெய்தது.
திருச்சி மாநகரில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நின்றது. சில இடங்களில் சாக்கடை கால்வாயில் மழைநீர் பெருக்கெடுத்ததால், அவை சாலையில் ஓடத்தொடங்கியது. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சில இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் வீடுகள் கட்டி விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அங்கு சரியான சாலைவசதி, சாக்கடை வசதி இல்லாததால் மழையால் அப்பகுதி சேறும், சகதியுமாக மாறியது.
திருச்சி தில்லைநகர், சத்திரம் உள்ளிட்ட இடங்கள் மற்றும் புறநகர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. தினமும் இரவு வேளையில் மழை பெய்து வருவதால் பெரிய அளவில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை.