பிரதமரின் குரல், விவசாயிகளின் மனசாட்சிக்கு விரோதமாக ஒலிக்கிறது- முத்தரசன் பேச்சு
கும்பகோணம், செப்.28-
மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள வேளாண் அவசர சட்டங்களைத் கண்டித்து கும்பகோணத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தி.மு.க தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு ஆர்பாட்டதை தொடங்கி வைத்து பேசினார்.
மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள உழவர்களுக்கு எதிரான 3 அவசர சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும். வேளாண் சட்டங்களால் கோடிக்கணக்கான விவசாயிகள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். இந்தியாவில் விவசாயிகளின் மனசாட்சிக்கு விரோதமான குரலாக பிரதமர் குரல் ஒலிக்கிறது. தான் ஒரு விவசாயி என கூறி கொண்டு இந்த திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரித்து விவசாயிகளுக்கு துரோகம் செய்து விட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.