செய்திகள்
கைது

தஞ்சை ஆவின் மேலாளரை கத்தியால் குத்திய காவலாளி கைது

Published On 2020-09-25 07:26 GMT   |   Update On 2020-09-25 07:26 GMT
பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஆவின் மேலாளரை கத்தியால் குத்திய காவலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளராக நாமக்கல்லை சேர்ந்த திருமுருகன் (வயது 27) பணிபுரிந்து வருகிறார்.

இங்கு காவலாளியாக ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடியை சேர்ந்த அன்புநாதன் (28) வேலைபார்த்து வந்தார்.

இந்நிலையில் காவலாளி அன்புநாதன் கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் மேலாளர் திருமுருகன் அவரை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து சரிவர வேலைக்கு வராமல் இருந்ததால் மேலிடத்துக்கு புகார் சென்றதன் பேரில் அன்புநாதன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் அன்புநாதன் வேலைக்கு வந்துள்ளார். இதனால் அவரை திருமுருகன் தடுத்து திருப்பி அனுப்ப முயன்றார். அப்போது அன்புநாதன் மறைத்து வைத்திருந்த கத்தியால் திருமுருகனை குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். திருமுருகனை மீட்டு தஞ்சையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்புநாதனை கைது செய்தனர்.

இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News