செய்திகள்
விசாரணை

திருப்பூரில் வாலிபர் மர்ம மரணம்- போலீஸ் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு விசாரணை

Published On 2020-09-23 09:31 GMT   |   Update On 2020-09-23 09:31 GMT
திருப்பூரில் போலீஸ் நிலையத்தில் வாலிபர் மர்மமாக இறந்தது குறித்து இன்று கூடுதல் மாஜிஸ்திரேட் போலீசாரிடம் விசாரணை நடத்துகிறார்.

திருப்பூர்:

திருப்பூர் கே.சி. செட்டிபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது28). கட்டிட தொழிலாளி. நேற்று இவரை நல்லூர் ஊரக போலீசார் ஒரு வழக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் மணிகண்டன் மர்மமான முறையில் இறந்து விட்டார். இதையடுத்து போலீசார் உடலை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மணிகண்டனின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்து முற்றுகையில் ஈடுபட்டனர். அவர்கள் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழக்கவில்லை.

போலீசார் அவரை அடித்து துன்புறுத்தி கொன்று விட்டதாக கூறினர்.

மேலும் அங்கு வந்த கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். அவர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதற்கிடையே நேற்று இரவு மணிகண்டனின் உடல் திருப்பூர் ஜே.எம்.4-வது கூடுதல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை காட்சிகள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.

போலீஸ் நிலையத்தில் வாலிபர் மர்மமாக இறந்தது குறித்து இன்று கூடுதல் மாஜிஸ்திரேட் நல்லூர் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று போலீசாரிடம் விசாரணை நடத்துகிறார். அப்போது, போலீஸ் நிலையத்திற்கு வாலிபர் மணிகண்டன் எந்த வழக்கில் விசாரிப்பதற்காக அழைத்து வரப்பட்டார்.

அவரை எத்தனை பேர் அழைத்து வந்தனர். இங்கு அவருக்கு ஏதேனும் துன்புறுத்தல் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? வாலிபர் இறந்தபோது யார்? யார்? போலீஸ் நிலையத்தில் இருந்தனர் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொள்கிறார்.

Tags:    

Similar News