search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாஜிஸ்திரேட் விசாரணை"

    சென்னை எம்.கே.பி.நகர் போலீஸ் காவலில் பிரபல ரவுடி மரணம் அடைந்தது தொடர்பாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கார்த்திக் உறவினர்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினர்.

    பெரம்பூர்:

    வியாசர்பாடி பக்தவத்சலம் காலனியை சேர்ந்தவர் கார்த்திக் (28). பிரபல ரவுடியான இவர்மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இவருடைய நண்பரான ரவுடி பழனி 2016-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவருடைய நினைவு தினத்தில் கார்த்திக்கும் அவருடைய நண்பர்களும் பழனி பேனருக்கு கடந்த 2 ஆண்டுகளாக பாலாபிஷேகம் செய்து கலாட்டாவில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து ரவுடித்தனமும் செய்து வந்தனர். வழிபறியிலும் ஈடுபட்டனர்.வருகிற 29-ந்தேதி பழனி நினைவு நாளில் இவர்கள் கலாட்டாவில் ஈடுபடலாம் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், அண்ணாநகரில் உள்ள ஒரு இடத்தில் பதுங்கி இருந்த கார்த்திக் அவருடைய நண்பர்கள் அன்வர் பாட்சா, ராஜ்குமார், அருண் பாண்டியன் ஆகியோரை நேற்று முன்தினம் எம்.கே.பி. நகர் போலீசார் சுற்றி வளைத்தனர்.

    அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அனைவரும் எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    குடிபோதையில் இருந்த கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர்களை எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கார்த்திக் நேற்று மதியம் மயங்கி விழுந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருடைய உடல்நிலை மோசமானதால் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.

    இந்த தகவலை அறிந்ததும், பக்தவத்சலம் காலனியில் உள்ள கார்த்திக் உறவினர்கள், நேற்று இரவு வியாசர்பாடி அம்பேக்தர் கல்லூரி அருகே மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அங்கு சென்று அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.

    இறந்த ரவுடி கார்த்திக் குடியிருந்த வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி பகுதியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அங்கு பதட்டம் நிலவியது. இன்றும் கார்த்திக் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கார்த்திக் நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மாஜிஸ்ரேட்டு நேரில் விசாரணை நடத்துகிறார். இதனால் அங்கு போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    ரவுடிகளை மடக்கி பிடித்தது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

    கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர்கள் இந்த பகுதியில் அடிக்கடி ரவுடி தனத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் நடந்த வழப்பறியிலும் இவர்களுக்கு தொடர்பு உண்டு. எனவே, அனைவரையும் தேடி வந்தோம். தப்பி ஓடிய அவர்களை செல்போன் மூலம் கண்டுபிடித்தோம். அதிக போதை காரணமாக கார்த்திக் இறந்திருக்கலாம். மாஜிஸ்திரேட் விசாரணை நடை பெறுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் எழும்பூர் 2-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு சந்தோஷ்குமார் ஸ்டான்லி மருத்துவமனை சென்று கார்த்திக் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

    உடல் பரிசோதனைக்கு பிறகு கார்த்திக் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதையொட்டி, ஸ்டான்லி ஆஸ்பத்திரியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×