செய்திகள்
கைது

கூலித்தொழிலாளி கொலை- தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் கைது

Published On 2020-09-22 10:10 GMT   |   Update On 2020-09-22 10:10 GMT
தஞ்சை அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
சாலியமங்கலம்:

தஞ்சை அருகே உள்ள மலையர்நத்தம் நடுத்தெருவை சேர்ந்தவர் பெத்தையன்(வயது56). கூலித்தொழிலாளி. இவரது மண்வெட்டியை பக்கத்து வீட்டை சேர்ந்த ரத்தினம் வாங்கி சென்று இருந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த பெத்தையன் வீட்டில் இருந்த மண்வெட்டியை காணாமல் ஆத்திரமடைந்தார். இதை அறிந்த ரத்தினம் நேரில் சென்று மண்வெட்டியை பெத்தையனிடம் கொடுத்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது அங்கு வந்த ரத்தினம் மகன் புண்ணியமூர்த்தி(34) திடீரென பெத்தையன் கையில் இருந்த மண்வெட்டியை பறித்து பெத்தையன் தலையில் வெட்டினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெத்தையன் மீண்டும் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பெத்தையன் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அம்மாப்பேட்டை போலீசார் புண்ணியமூர்த்தி மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட புண்ணியமூர்த்தி திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News