செய்திகள்
மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்- சென்னையில் இன்று நடக்கிறது
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததற்கு இடையே ஏற்கனவே 2 முறை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்தினார். அதில், கொரோனா நிவாரணம், நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டன.
இந்நிலையில், 3-வது முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கட்கிழமை அனைத்து கட்சிக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கிறது.
இதுதொடர்பாக, தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 21-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறும்.
இந்தக் கூட்டத்தில், விவசாயிகளுக்கு விரோதமாக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள 3 சட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது என தெரிவித்துள்ளது.