செய்திகள்
சின்னாளபட்டியில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை
சின்னாளபட்டியில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
சின்னாளபட்டி:
சின்னாளபட்டி சோடா பாக்டரி தெருவில் வசிப்பவர் ரகுபதி. ஜவுளிக்கடை அதிபர். இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு சென்னையில் டாக்டராக பணியாற்றும் தனது மகன் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று மாலை இவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் சென்னையில் உள்ள ரகுபதிக்கும், சின்னாளபட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரது உறவினர்களிடமும், அக்கம்பக்கத்தினரிடமும் போலீசார் விசாரித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரகுபதி வீட்டில் இருந்து 70 பவுன் நகைகள் கொள்ளை போய் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே ரகுபதி சென்னையில் இருந்து புறப்பட்டு சின்னாளபட்டிக்கு வந்து கொண்டு இருக்கிறார். அவர் இன்று சின்னாளப்பட்டிக்கு வந்த பின்னர் தான் எவ்வளவு நகைகள் கொள்ளை போனது என்ற விவரம் தெரியும். இந்த துணிகர கொள்ளை குறித்து சின்னாளபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.