செய்திகள்
கல்லிடைக்குறிச்சியில் கோஷ்டி மோதல்- 5 பேர் மீது வழக்கு
கல்லிடைக்குறிச்சியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றது தொடர்பாக இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
அம்பை:
கல்லிடைகுறிச்சியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றது தொடர்பாக இருதரப்பினருக்கிடையே வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சமரசமாக பேசி சென்றனர். தொடர்ந்து ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களின் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இது குறித்து அறிந்ததும் மாவட்ட சூப்பிரண்டு மணிவண்ணன், அம்பை துணை சூப்பிரண்டு பிரான்சிஸ் ஆகியோர் வந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.