செய்திகள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நேரடியாக சென்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த முதலமைச்சர் பழனிசாமி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பின், ரூ. 32.16 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து, அங்கிருந்து நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி சென்றார். அங்கு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அங்கும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாளொன்றுக்கு 70 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. வருவாய், காவல், உள்ளாட்சி துறைகள் இணைந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்கிறது என குறிப்பிட்டார்.