செய்திகள்
கோப்புபடம்

செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் மாணவன் தற்கொலை

Published On 2020-07-30 07:30 GMT   |   Update On 2020-07-30 07:30 GMT
ஆன்லைன் வகுப்புக்காக வாங்கிக் கொடுத்த செல்போனில் வீடியோ விளையாடியதை கண்டித்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் எப்போதும் திறக்கப்படும் என்பது தெரியாத நிலை உள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு ஆன்டிராய்டு செல்போன் அல்லது மடிக்கணினி அவசியமாக உள்ளது.

இதனால் மாணவ-மாணவிகள் ஆன்லைன் வகுப்பில் படிக்க ஆன்டிராய்டு செல்போன் வாங்கி கொடுக்க வேண்டி தேவை பெற் றோருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தங்களின் குழந்தைகளுக்கு ஆன்டிராய்டு செல்போன் வாங்கி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை செல்வபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுடைய மகன் ராதாகிருஷ்ணன் (வயது 12). இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு- படித்து வந்தார். அவர் படிக்கும் பள்ளியில் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே ராதாகிருஷ்ணனுக்கு அவரது பெற்றோர் ஒரு ஆன்டிராய்டு செல்போன் வாங்கிக் கொடுத்தனர்.

இந்த நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் காலையில் ஆன்லைன் வகுப்பு நடைபெற்றது. அதன் பிறகு மாணவன் ராதாகிருஷ்ணன் செல்போனில் வீடியோ கேம் விளையாடியுள்ளார். இதை பார்த்த லட்சுமி தனது மகனிடம் செல்போனை படிக்க பயன்படுத்த வேண்டும். விளையாடி பொழுதுபோக்க வேண்டாம் என்று கூறி கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ராதாகிருஷ்ணன் தனது தாயிடம் கோபித்துக் கொண்டு மாலை 6 மணியளவில் வீட்டில் ஒரு அறைக்கு சென்று உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.

அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமி கதவை தட்டினார். ஆனால் அறையில் இருந்து சத்தம் எதுவும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அந்த அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ராதாகிருஷ்ணன் பிணமாக கிடந்தார். அதை பார்த்து லட்சுமி கதறி அழுதார். இது குறித்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் விரைந்து வந்து ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News