செய்திகள்
என்ஜினீயர் தற்கொலை

மல்லூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட என்ஜினீயர் தற்கொலை

Published On 2020-07-08 11:55 GMT   |   Update On 2020-07-08 11:55 GMT
மல்லூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
பனமரத்துப்பட்டி:

மல்லூர் அருகே உள்ள தாசநாயக்கன்பட்டி கிராமம் சுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் பரஞ்ஜோதி. இவரது மகன் பிரதீப் ராஜ் (வயது 29). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பிரதீப் ராஜிற்கும், சேலம் ஓமலூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சேலம் வந்த பிரதீப் ராஜ் கடந்த 3 மாதமாக வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்தநிலையில் பிரதீப் ராஜின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் மாலை பிரதீப் ராஜ் தனது வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரதீப் ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில் பிரதீப் ராஜ் எழுதி வைத்திருந்த டைரியை போலீசார் கைப்பற்றினர். அந்த டைரியில், தற்போது உள்ள சூழ்நிலையில் தன்னால் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதற்கான பொருளாதார பணவசதி இல்லை. இதனால் எனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதி வைத்திருந்தார். தொடர்ந்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News