செய்திகள்
எரித்துக்கொலை

திருச்சி அருகே 9ம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை

Published On 2020-07-06 14:11 GMT   |   Update On 2020-07-07 02:28 GMT
திருச்சி மாவட்டம் சோமரசன்பேட்டை பகுதியில் 9ம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோமரசன்பேட்டை:

திருச்சி மாவட்டம் சோமரசன்பேட்டையில் 9ம் வகுப்பு பயிலும் மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சோமரசன்பேட்டையில் ஊருக்கு வெளிப்புற பகுதியில் எரிந்த நிலையில் மாணவியின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு பொது மக்கள் தகவல் அளித்தனர்.  பொது மக்களின் புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.  போலீசாரின் விசாரணையில் அந்த மாணவி அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும், 9ம் படித்து வந்தவர் என்பதும் தெரியவந்தது. 

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட மாணவி மதியம் 1 மணி வரை அவரது விட்டில் இருந்ததாகவும், மாலையில் சடலமாக பார்த்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட மாணவியின் அருகே மண்ணெண்ணெய் கேனும், தீப்பெட்டியும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தடயங்கள் ஏதும் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக தடயவியல் துறையினர், வருவாய் துறையினர், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மாணவியை கொடூரமாக கொலை செய்த நபரை கைது செய்யும் வரை அவ்விடத்தை விட்டு செல்லப் போவதில்லை என மாணவியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவி கொலைக்கான காரணம் குறித்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். 
Tags:    

Similar News