செய்திகள்
கொரோனா வைரஸ்

தேனியில் 4 டாக்டர்கள் உள்பட 43 பேருக்கு கொரோனா

Published On 2020-06-23 07:58 GMT   |   Update On 2020-06-23 07:58 GMT
தேனி மாவட்டத்தில் நேற்று இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
தேனி:

தேனி மாவட்டத்தில் நேற்று இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதில், உத்தமபாளையம் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெறும் 2 டாக்டர்கள், ஓடைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் பணியாற்றிய 33 வயது டாக்டர் என 4 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை 10 டாக்டர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கேண்டீன் நடத்தும் 53 வயது நபரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த கேண்டீனில் டீ, காபி சாப்பிட்ட நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதேபோல், பெரியகுளம் வடகரையில் 15 பேர், தென்கரையில் 13 பேர் என பெரியகுளம் பகுதியில் மட்டும் 4 பெண்கள் உள்பட 28 பேருக்கு ஒரே நாளில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பழனிசெட்டிபட்டியில் மதுரை சென்று வந்த கணவன்-மனைவியும், கம்பத்தில் 2 ஆண்களும், தேவாரம் லட்சுமிநாயக்கன்பட்டி, அம்மச்சியாபுரம், கெங்குவார்பட்டி, வயல்பட்டி, சின்னமனூர் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News