செய்திகள்
வானிலை நிலவரம்

தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு

Published On 2020-06-10 10:28 GMT   |   Update On 2020-06-10 10:28 GMT
தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்காலில் 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.  நாகப்பட்டினத்தில் 2 செமீ மழை பெய்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக ஜூன் 10 மற்றும் 11ம் தேதிகளில் மத்திய, தெற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் காற்றுவீசக்கூடும்.  மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடலோர பகுதியில் மணிக்க 45-55 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.

ஜூன் 11ம் தேதி வட தமிழக மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளிலும், ஜூன் 10 முதல் 14ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியிலும், ஜூன் 13ம் தேதி கோவா மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக கடலோர பகுதிகளிலும், ஜூன் 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும் பலத்த காற்று வீசக்கூடும்.

குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை ஒரு சில நேரங்களில் கடல் அலை 2.9 முதல் 3.9 மீட்டர் வரை எழும்பக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படம். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News