செய்திகள்
கொரோனா வைரஸ்

சென்னையில் இருந்து தொண்டிக்கு வந்த முதியவருக்கு கொரோனா

Published On 2020-06-03 11:57 GMT   |   Update On 2020-06-03 11:57 GMT
சென்னையில் இருந்து தொண்டிக்கு வந்த முதியவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொண்டி:

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள மதுரை ரோட்டை சேர்ந்த 63 வயது முதியவர் சென்னை மண்ணடியில் பணியாற்றி வந்தார். ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சென்னையில் இருந்தார்.

அரசு ஊரடங்கு விதிகளை தளர்த்தி இ-பாஸ் மூலம் சொந்த ஊருக்கு திரும்பலாம் என அறிவித்தது. அதன்படி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அந்த முதியவர் சொந்த ஊரான தொண்டிக்கு திரும்பினார்.

இந்த நிலையில் 2 நாட்களாக அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர் இருமல், காய்ச்சல், சளி போன்ற கொரோனா அறிகுறியும் இருந்தது.

இதையடுத்து உறவினர்கள் அவரை தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் முதியவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முதியவரின் உறவினர்களுக்கு கொரேனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News