செய்திகள்
நகை பறிப்பு

மதுரையில் போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2020-06-02 10:26 GMT   |   Update On 2020-06-02 10:26 GMT
மதுரையில் போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரையில் கடந்த 2 மாதமாக ஊரடங்கு காலத்தில் நகை பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறவில்லை. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் வழிப்பறி மற்றும் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

மதுரை மகாத்மா காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி விஜயா (வயது52) இவர் நேற்று மகாத்மா காந்தி நகர் பஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் விஜயாவை வழிமறித்து போலீஸ் என்று அறிமுகப்படுத்தி கொண்டனர். இங்கு திருடர்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் நகையை கழற்றி பத்திரமாக வைத்து கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதை கேட்ட விஜயா அவர்கள் 2 பேரையும் போலீஸ் என்று நம்பியதுடன் தான் அணிந்திருந்த 3 பவுன் நகையை கழற்றி சேலையில் பத்திரமாக வைக்க முயன்றார்.

அப்பேது அந்த மர்ம நபர்கள் 3 பவுன் செயினை விஜயாவிடம் இருந்து பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து கூடல்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News