செய்திகள்
திருவெண்ணெய்நல்லூர் அருகே தொழிலாளியை தாக்கியவர் கைது
திருவெண்ணெய்நல்லூர் அருகே தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசூர்:
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள திருமுண்டீச்சரம் கிராமத்தை சேர்ந்தவர் துரை (வயது 39), கூலித்தொழிலாளி. இவரும் அதே கிராமத்தை சேர்ந்த குரு (45) என்பவரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் குடிபோதையில் ஒருவருக்கொருவர் தகராறில் ஈடுபட்டனர். அப்போது துரையை உருட்டுக்கட்டையால் குரு தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த துரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து துரையின் மனைவி சந்திரா, திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குருவை கைது செய்தனர்.