செய்திகள்
தமிழக அரசு

தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெறவேண்டும் - தமிழக அரசு அறிவிப்பு

Published On 2020-05-24 18:56 GMT   |   Update On 2020-05-24 18:56 GMT
தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இதற்கிடையே, நாளை முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி அறிவித்தார். இதையடுத்து, நாடு முழுவதும் விமான டிக்கெட்டுக்கான முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது.

இந்நிலையில், உள்நாட்டு விமான பயணம் பற்றி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.  அதில் கூறியுள்ளதாவது:

பயணிகளின் உடல்நிலை, தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வருகிறார்களா? என்ற விவரங்களைப் பதிவிட வேண்டும்.

தவறான தகவல் அளிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் இருப்பின் சிகிச்சை அளிக்கப்படும். இல்லையெனில் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர விரும்பும் விமான பயணிகள், தமிழக அரசின் இ-பாஸ் பெற வேண்டியது அவசியம். இ-பாஸில் 8 விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கும்.

விமானப் பயணிகள் கையில் தனிமைப்படுத்தப்படும் நாள் தொடர்பாக ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை பதிக்கப்படும். 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சொந்த வீடு இல்லாதவர்கள் பணம் செலுத்தி தனிமைப்படுத்தும் மையத்தில் சேர வேண்டும்.

திருச்சியில் இருந்து நாளை விமானங்கள் இயக்கப்படும். சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு விமான சேவை என தகவல்.

விமான நிலைய வாசல்களில் மாவட்ட ஆட்சியர்கள் சோதனை மையம் அமைக்க வேண்டும்.

பயணிகள் செல்லும் காரில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். பயணிகளின் உடைமைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படும். தேவையான பயணிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கப்படும்.

தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News