வனஊழியரை கத்தியால் குத்திய வாலிபர் சிறையில் அடைப்பு
கோவை:
கோவை ஆலாந்துறை அடுத்த இருட்டுப்பள்ளத்தை சேர்ந்தவர் நடராஜ் (55). இவர் போளுவாம்பட்டி வனச்சரகத்தில் வனக்காப்பாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று சாடிவயல் வனத்துறை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த கல்கொத்திபதி மலை கிராமத்தை சேர்ந்த நந்தகுமார் (22), என்பவர் குடிபோதையில் சோதனைச் சாவடி வழியாக தனது கிராமத்துக்கு செல்ல வேண்டும் என வனத்துறை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வனக்காப்பாளர் நடராஜ் அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததால் சோதனைச்சாவடி வழியாக அனுமதிக்க முடியாது என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நந்தகுமார் வனக்காப்பாளர் நடராஜிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது நந்தகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வனக்காப்பாளர் நடராஜை குத்தினார். இதில் பலத்த காயமடைந்த நடராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இதுகுறித்து காருண்யாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.